நீங்கள் பணி புரியும் இடத்தில், உங்களுடன் பணி புரிபவரோ உங்கள் மேலதிகாரியோ அடக்கியாளும் குணம் படைத்தவரா? அல்லது உங்கள் மேலதிகாரி, உங்களின் திறமையான பணிகளைப் பாராட்டாமல் இருக்கின்றாரா? அல்லது, திறமையாகச் செய்த உங்கள் பணியைத் தனது திறமையாக மாற்றிக்கொள்கிறாரா?
ஆம்; இச்சூழ்நிலைகளில், உங்கள் உரிமைக்கு வேறொருவர் சவால் விடுவதாகவும், உங்களின் உரிமையில் தலையிடுவதாகவும் நீங்கள் நினைப்பதில் தவறில்லைதான். இத்தகைய இறுக்கமான சூழலில் பணி புரிவது, உங்களால் மட்டுமின்றி, பெரும்பாலான பணியாளர்களால் சகிக்க முடியாதுதான். இச்சூழல் உங்கள் பணிகளின் தரத்தைப் படிப்படியாக நாளடைவில் குறைத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உங்களைத் தன் ஆளுகைக்கு உட்படுத்தும் ஒருவரோடு உங்களால் தொடர்ந்து பணி புரிய முடியாதுதான். ஆனால், சில கட்டாயச் சூழ்நிலைகளால் அவருக்குக் கீழ் நீங்கள் வேலை செய்தே ஆகவேண்டியவராய் இருக்கின்றீர்கள்! இப்போது என்ன செய்வது என்பதுதான் பெரிய கேள்வி. இதைச் சமாளிக்க, இதோ சில வழிகள்:
- பழமையான - இலகுவான முறை, முதலாவதாக, அத்தகைய மேலாளரை உங்கள்மீது கட்டுப்பாடு விதிக்கவிடக் கூடாது.
- கடுமையான உங்கள் ‘பாஸ்’ (boss) உங்களுக்குக் கட்டளையிட வருவதற்கு முன், அவருடைய முகபாவங்களைக் குறிப்பால் உணர்ந்து, உங்களை அவரிடமிருந்து சற்றுத் தொலைவாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.
- உங்களின் மற்ற வேலைகளில் முனைப்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டால், அவர் உங்களிடம் வருவதையேகூடத் தவிர்த்துக் கொள்ளலாம்.
- மோதல் ஏற்படும் சூழலில், நீங்கள் உங்களைக் குறையற்றவராக வாதிட முற்பட்டால், இந்த dominating boss உங்களை அடக்கி ஒடுக்கப் பார்ப்பார். அதனால், அவருடைய வலிமைதான் கூடும். எனவே, நீங்கள் சற்றே நிதானிக்க வேண்டும்.
- உங்களைக் குறை கூறித் தாழ்த்த முற்பட்டாலும் அச்சுறுத்தினாலும், அதனால் நீங்கள் பாதிக்கப்படப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தாதீர்கள். இந்த உங்களின் நிதானம், அவரை முட்டாளாக்கும்; அல்லது, அவரே தனது போக்கை மாற்றிக்கொள்வார்.
- அடக்கியாளும் தன்மையுடைய மேலதிகாரியுடன் தர்க்கம் செய்வது, நம் நேரத்தை வீணடிப்பதாகும். தர்க்கம் தொடர்ந்தால், அதற்கு முடிவே இல்லாமலாகி, இறுதியில் அவருடைய அதிகாரமே நிலைபெறும் அளவுக்குப் போய்விடும்.
- அவருக்கு எதிராகச் சவால் விட்டால், அதுவே பெரிய ஆபத்தானதாகி, உங்களுடன் அவர் எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் முன்வர மாட்டார்.
- இதற்கு ஓர் எளிதான வழி, அந்த மேலதிகாரி கூறுவது சரிதான் என்று காட்டிக்கொள்ள வேண்டும். முதலாவது, அவர் தான் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்றுதான் விரும்புவார். அவர் கூறுவதைச் செவி தாழ்த்திக் கேட்பதுவே, இந்தப் போராட்டத்தில் பாதி வெற்றி கிட்டியதாகும்.
- ‘இல்லை, முடியாது, சாத்தியமில்லை’ என்பவை போன்ற சொற்களை அவர் உங்களிடமிருந்து வருவதை அவர் விரும்பமாட்டார் என்பதால், அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
- செயல்பாட்டுத் திட்டங்களில் முடிவெடுக்கும் உரிமையை முழுமையாக அவருக்கே விட்டுக்கொடுக்க வேண்டும்.
- இத்தகைய கெடுபிடியான மேலதிகாரியின் செயல்பாடுகள் அனைத்தும், அவரிடத்தில் மறைந்துள்ள அச்சத்தினாலும் ஆத்திரத்தினாலும் பாதுகாப்பற்ற தன்மையினாலுமே வெளிப்படுகின்றன என்பதை நீங்கள் மனத்தில் பதிய வைக்கவேண்டும்.
- தன்னைப் பாதுகாக்கவே அவர் பிறரை அடக்கியாள முற்படுகிறார் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் உங்களுக்குத் தேவையானதும் தவிர்க்க முடியாததும் ஒன்றே ஒன்றுதான். அதுதான் - தன்னடக்கம்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|







