அல்கொய்தா தீவிரவாதி பயணிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மும்பையிலிருந்து துபைக்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தீவிரவாதி என்ற சந்தேகத்தில்,விமானத்தில் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இ.கே.505 விமானம், மும்பையிலிருந்து துபைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(07/02/2010) அன்று காலை புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானநிலைய சரக்கு கையாளும் பிரிவுக்கு ஒருவர் போன் செய்தார். தனது பெயர் சுரேஷ் சவாண் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், "துபை செல்லும் விமானத்தில், ஷாபாஸ் கான் என்ற பெயருடைய, அல்கொய்தா தீவிரவாதி பயணிப்பதாக தெரிவித்தார்.
அதையடுத்து, துபை விமானத்தை உடனடியாகத் தரை இறக்குமாறு, மும்பை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது. காலை 10.00 மணியளவில் துபை விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழிறக்கப்பட்டனர். அனைவரும் தீவிரசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடைமைகளும் சோதிக்கப்பட்டன.
ஷாபாஸ் கான் என்ற பெயருள்ள பயணி விமானத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. அவரும்,அவரது மனைவியும் விமானநிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின், ஷாபாஸின் மனைவி மட்டும், இதய நோயாளி என்பதால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். விசாரணை குறித்த இதர விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. விமானப் பயணிகள் அனைவரும் தீவிரமாக சோதிக்கப்பட்ட பின், நான்கு மணிநேரம் கழித்து, மதியம் 2.00 மணியளவில் துபைக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சோதனைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்ததாக, மும்பை சர்வதேச விமானநிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென தரையிறக்கப்பட்டு, விமானத்திலிருந்து இருவர் கைது செய்யப்பட்டது பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



