மத்திய மந்திரி மு.க.அழகிரியை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். அவரை சந்தித்த பின் மக்களவையில் தமிழில் பேசும் பிரச்சினையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சபாநாயகர் மீராகுமார் கூறினார்.மக்களவை சபாநாயகர் மீராகுமார் நேற்று மதியம் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் உள்பட பலர் வரவேற்றனர். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
மக்களவை சபாநாயகராக பதவி ஏற்றபின் முதல் முறையாக சென்னைக்கு வருகிறேன். இங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளேன் என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- மக்களவையில் தமிழில் பேசுவதற்கான அனுமதி தொடர்பாக, மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரி உங்களை சந்தித்து பேச இருப்பதாக கூறியுள்ளாரே?
பதில்:- ஏற்கனவே மத்திய மந்திரி மு.க.அழகிரி என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அவரைச் சந்திக்க நானும் காத்திருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அவர் எப்போதும் வரலாம். அடுத்த வாரம் அவர் என்னை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறார்.அவரைச் சந்திக்கக் காத்திருக்கிறேன். என்னை சந்தித்து அவருடைய குறைகளை தெரிவிக்கலாம். அவரைச் சந்தித்தபின் அவரது பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கேள்வி: மக்களவை கூட்டத்தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளதே?
பதில்:- வருகிற 22-ந் தேதி நடக்க உள்ள மக்களவை கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரெயில்வே மற்றும் பொது பட்ஜெட்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இவை தவிர வேறு பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட உள்ளன. அதிக முக்கியத்துவம் நிறைந்த கூட்டத்தொடராக இது இருக்கும்.
கேள்வி:- மக்களவைக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பார்களா?
பதில்:- முக்கியத்துவம் நிறைந்த இந்த கூட்டத்தொடர் சுமுகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற அனைத்து கட்சிகளும் குறிப்பாக எதிர் கட்சிகள் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி:- தனி தெலுங்கானா கோரி எம்.பி.க்கள் ராஜினாமா செய்து உங்களிடம் கடிதம் தந்து உள்ளார்களே? அவை ஏற்றுக்கொள்ளப்படுமா?
பதில்:- தனி தெலுங்கானா கோரி எம்.பி.க்கள் ராஜினாமா கடிதம் தந்து உள்ளனர்.ஆனால் அவர்களில் சிலரது கடிதம் முறைப்படி இல்லை. ஆகவே அந்த ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்படும்.முறைப்படி வந்துள்ள கடிதங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் அக்கடிதங்கள் மீது உரிய முடிவு எடுக்கப்படும் என்று மீராகுமார் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



