மது விற்பனை இருக்கும் வரை வறுமை ஒழியாது - மணியன்!

E-mail அச்செடுக்க
"மது விற்பனை இருக்கும்வரை தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது" என காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கடந்தச் சனிக்கிழமை (07/02/2010) அன்று நாமக்கல்லில் நடந்த தேசிய சிந்தனை கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போது கூறினார்.

"டாஸ்மாக் கடைகள் மூலம் பெறக்கூடிய வருமானத்தில் தமிழக அரசு பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.​ இலவச திட்டங்கள் வேண்டும் என தமிழக அரசிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.​ வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தலில் இலவச திட்டங்கள் குறித்த கவர்ச்சிகர அறிவிப்புகளை திமுக வெளியிட்டது.​ தற்போது,​​ இந்தத் திட்டங்களுக்காகவே தமிழக மக்களை குடிமகன்களாக மாற்றி வருகிறது.

இலவச வேட்டி,​​ சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கூறுகையில் தமிழகத்தில் மாற்று உடையில்லாமல் 3 கோடி மக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.​ இதற்காக ஆண்டுக்கு ரூ.​ 2,600 கோடி செலவில் இலவச வேட்டி,​​ சேலை வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.​ ஆனால்,​​ 2008-09-ம் ஆண்டில் டாஸ்மாக் கடைகளில் நடந்த மது விற்பனையில் மது மீது விதிக்கப்பட்ட உள்நாட்டு வரி மற்றும் விற்பனை வரி ஆகியவற்றின் மூலமாக மட்டும் ரூ.​ 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் வந்துள்ளது.​ மது மீதான வரி மூலமே 10 ஆயிரம் கோடி வருவாய் என்றால் இந்தத் தொகையை வைத்து மாற்று உடையில்லாமல் உள்ள 3 கோடி மக்களை வசதியாக வாழ வைக்க முடியும்.

இதை விடுத்து இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி,​​ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி,​​ உயிர்காக்கும் காப்பீடு திட்டம் என்பதெல்லாம் மக்களை சிந்திக்க செய்யாமல் வைத்திருப்பதற்கே.​ ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கும் கிராம மக்கள்தான் தினமும் 70 ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மதுவை அருந்தும்நிலை உள்ளது.​ உயிர்காக்கும் காப்பீடு திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.​ 600 கோடி தனியார் நிறுவனத்துக்கு வழங்கினால் 5 ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி வழங்க வேண்டியுள்ளது.​ இந்த 3 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் தலா 100 கோடி செலவில் மருத்துமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அரசே துவக்க முடியும்.​ தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையும் ஓராண்டில் உணவு,​​ மருந்துக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிட்டால் மது குடிக்க செலவிடும் தொகையே அதிகமாக உள்ளது.​ இந்தநிலை மாற வேண்டும்.​ இலவச திட்டம் என்பது கல்விக்கு மட்டுமே இருக்க வேண்டும்.​ இலவச திட்டங்களால் மக்களை ஏமாற்றாமல் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக மக்களை தயார்படுத்த வேண்டும்.​ பொதுநல அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும்,​​ கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும்.​ ​ மது விற்பனையால் வரும் வருமானம் பாவத்தின் சம்பளம் என்பதை உணர வேண்டும்.

காந்திய அரசியல் இயக்கம் குறைந்தபட்சம் 100 ஊராட்சிகளில் இயக்க நிர்வாகிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளது.​ தமிழகத்தில் உள்ள 12,600 ஊராட்சிகளில் 100 ஊராட்சிகளிலாவது காந்திய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொறுப்புக்கு வந்தால் அந்த 100 ஊராட்சிகளை முன்மாதிரி ஊராட்சிகளாக மாற்றம் செய்து அவற்றை பிற ஊராட்சிகளும் கடைப்பிடிக்க செய்ய முடியும்.​ இதற்காக கிராமம் தோறும் சமூக அக்கறையுள்ள 10 இளைஞர்கள் இயக்கத்துக்கு முன்வர வேண்டும்.​ இந்த இளைஞர்களைக் கொண்டு கிராம சுயராஜ்ஜியம் அமைக்க பாடுபடுவதே காந்திய அரசியல் இயக்கத்தின் தலையாய நோக்கம்.​ இந்த இயக்கத்தில் வன்முறைக்கு இடமில்லை.​ முழுக்க,​​ முழுக்க காந்தியக் கொள்கைகள் பின்பற்றப்படும்" என்று மேலும் கூறினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

Search


விளம்பரம்