ஆந்திர மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4% இடஒதுக்கீட்டை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.ஆந்திரப் பிரதேசத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அரசால் அமல்படுத்தபட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து சில அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இவ்வழக்கின் மீதான தீர்ப்பு இன்று(08/02/2010) வழங்கப்பட்டது.
தீர்ப்பில், "சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது" என கூறப்பட்டுள்ளது. எனினும் "கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தச் சட்டப்படி இடஒதுக்கீடு பெற்றது செல்லும்" எனவும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்வது இது மூன்றாவது முறையாகும். 2004-ல் ஆந்திர மாநில அரசு முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியபோது, இதே போன்று ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.
அதன்பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றிமைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டுவதாகக் கூறி அதையும் உயர்நீதிமன்றம் மீண்டும் ரத்து செய்தது.
இதன்பிறகு மொத்த இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்குள் அடக்கும்படியாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் மீதும் தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மூன்றாவது முறையாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (2)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 





