கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 61 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதன்பிறகு காஞ்சிபுரம், திருமங்கலம் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளை திமுகவிடம் இழந்து சட்டசபையில் அ.தி.மு.க. வின் பலம் 59 ஆகக் குறைந்தது.சில மாதங்களுக்கு முன் நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்தித்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார். எஸ்.வி.சேகர் எந்த கட்சியையும் சாராத எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது அ.தி.மு.க.வின் பலம் 61 இலிருந்து 57 ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவாக திரும்பி உள்ளார்கள். இருவரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததால் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. பக்கம் தாவலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்ற மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அழகிரி 2011ஆம் வருடத்திற்குள் அதிமுக காணாமல் போகும் என்றார். பேசிய கையோடு அதிமுகவிலிருந்து இரு எம்.எல்.ஏக்கள் தற்போது முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து திமுக ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். இதனிடையே அமைச்சர் பொன்முடி அதிமுக விரைவில் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை விரைவில் இழக்கும் என்று பேசியுள்ளார்.
கட்சி தாவும் எம்.எல்.ஏக்கள் ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் உட்கட்சிப் பூசல். அதிமுக தலைமையால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு எதிராக, கட்சித் தலைவி ஜெயலலிதா வீட்டருகே போராட்டம், சாலை மறியல் என கட்சி நிர்வாகிகளும் அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.
இலவசங்களால் மக்களைக் கட்டிப்போட்டு அடுத்தடுத்து இடைத்தேர்தல்களில் வென்று திமுக தன்பலத்தை உயர்த்திக் கொள்வதுடன், எதிர்கட்சிக் கூடாரத்திலும் இத்தகைய குழப்பங்களைச் செய்து வருகிறது. இதனால் சோர்வுற்றிருக்கும் கட்சித் தொண்டர்களையும் விசுவாசிகளையும் தக்க வைத்துக் கொள்ளவும் மேலும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறால் இருக்கவும், கட்சியை பலப்படுத்தவும் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தற்போதையை எம்.எல்.ஏ.க்கள் 55 பேருக்கும் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜெயலலிதா உறுதிமொழி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் மூலம் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் 38 ஆண்டுகால வரலாற்றில் இத்தகைய உறுதிமொழி கொடுப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. தலைமைக் கழகப் செயலாளர் செங்கோட்டையன், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன், இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து பேசி வருகிறார்கள்.
இந்நிலை நீடித்தால் பொன்முடி சொன்னதுபோல் அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தை இழப்பதுடன் மைனாரிட்டி திமுக அரசு என்ற அதிமுகவின் தொடர் வசவுகளிலிருந்தும் தப்பிக்கும். மேலும் இடைத்தேர்தல்களில் 40,000 வாக்குகளில் வெல்வோம் என்று சொல்லியடிக்கும் அழகிரி ஃபார்முலாவும் ஒர்க் அவுட்டானால் அதிமுகவின் நிலை பரிதாபம்தான்!
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|







