பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே, பள்ளி வேன் கவிழ்ந்து ஒரு மாணவி பலியானார்; ஏழு குழந்தைகள் படுகாயமடைந்தனர். கொதிப்படைந்த கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி ஆதனூரில், வி.ஆர்.வீரப்பா நினைவு உயர்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று, தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, அரசு விடுமுறையாக உள்ள நிலையில், சிறப்பு வகுப்பு என்ற பெயரில் இப்பள்ளி செயல்பட்டது. பள்ளிக்கு, 21 குழந்தைகள் மகேந்திரா வேனில் அழைத்து வந்தனர். செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு திருப்பத்தில் வேன் திரும்பியது. எதிரே ஒரு ஆட்டோ வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த வேன், ரோட்டோரம் கவிழ்ந்தது. வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
அப்பகுதி மக்களும், அவ்வழியாக வந்த பஸ் மற்றும் பிற வாகனங்களில் வந்தவர்களும், குழந்தைகளை காப்பாற்றி, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நான்காம் வகுப்பு படிக்கும் ஆவணம் சுந்தர் மகள் பிரியங்கா என்ற மாணவிக்கு, கை துண்டாகி ரத்தம் கொட்டியது. பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், படுகாயமடைந்த பிரியங்கா, சோனியா, ஹரிகரன், முத்தமிழ்அழகன், காயத்ரி, துர்காதேவி, கார்த்திகா, சண்முகராஜன் ஆகிய எட்டு குழந்தைகளை, ஆம்புலன்சில் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.
வரும் வழியில், அதிக ரத்தப்போக்கால் பிரியங்கா இறந்தார். மற்ற ஏழு குழந்தைகளும் தஞ்சாவூர் ரோகிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இச்சம்பவம் அறிந்து, பேராவூரணி அரசு மருத்துவமனை முன், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார், மக்களை சமாதானம் செய்தனர். அப்பகுதியில் பதட்டம் காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பிரச்னையில் சிக்கியுள்ள பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வேன் டிரைவர் மொபைல் போனில் பேசியபடி, வேனை வேகமாக ஓட்டி வந்ததாக' காயம் அடைந்த குழந்தைகள் தெரிவித்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



