திருப்பூர்: கடந்த சில நாட்களாக மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தலைதூக்கியிருப்பதால், மக்கள் காலி குடங்களுடன் ரோட்டுக்கு வந்து மறியல் போராட்டங்களில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாமல் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. பருவ மழை சரிவர பெய்யாததால், நீர் நிலைகள் வறண்டு, பல உள்ளாட்சி நிர்வாகப் பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் இப்போதே சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகராட்சியாக இருந்த திருப்பூர், மாநகராட்சியாகவும், மாவட்டமாகவும் தகுதி உயர்ந்துள்ள நிலையில் புதிய மாவட்டத்தின் வளர்ச்சிக்கேற்ப புதிய குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன ஆனால், இப்போதுள்ள குடிநீர் திட்டங்கள் மக்கள் தொகை பெருக்கத்துக்கு போதுமானதாக இல்லை.
கோடை காலத்தில், இம்மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அன்னூர், அவிநாசி, திருப்பூர் பகுதி களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீர் ஆதாரங்கள் அமைந்த மேட்டுப் பாளையம், பில்லூர் பகுதிகளில், தண்ணீர் தட்டுப்பாடு இப்போதே தலை தூக்கி விட்டது. குறைவான நேரத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்வதால், போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை' என்று கூறி, பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டுக்கு வந்து மறியல் போரட்டங்களில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
தண்ணீர் பிரச்னைக்காக பொதுமக்கள், கவுன்சிலர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை மாநகராட்சி பகுதியில் பரவலாக ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தண்ணீர் வினியோக நேரத்தை அதிகரிக்க வேண்டும் கூடுதல் வால்வுகள் பொருத்த வேண்டும்; பொது குழாய்களை அதிகப் படுத்த வேண்டும்' என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



