தன் இசை மீதான ராயல்டி உரிமையைப் பயன்படுத்தியதில் மோசடி செய்ததாக ஒரு இசைத்தட்டு நிறுவனம் மீது இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் நேற்று(வியாழக்கிழமை) புகார் ஒன்று அளித்துள்ளார்.
இது குறித்து இளையராஜா பத்திரிக்கையாளர்களிடம் கூறும் போது, "நான் இசையமைத்த தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் இசை ஒலி நாடாக்களையும், டிஜிட்டல் இசைத் தட்டுகளையும் வெளியிடும் உரிமையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இசைத் தட்டு நிறுவனம் ஒன்றிடம் வழங்கினோம்.
இந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக இசை வெளியீடுகள் மூலம் கிடைத்த வருவாயில் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அளிக்க வேண்டிய உரிமைத் தொகையை அளிக்கவில்லை.
மேலும், நான் இசையமைத்த தெலுங்கு படங்களின் இசை உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு அந்நிறுவனத்தினர் விதிகளுக்குப் புறம்பாக விற்றுள்ளனர்.
இத்துடன் அல்லாமல், இசை உரிமையை நியூயார்க், லண்டன் நகரங்களில் செயல்படும் ஒரு நிறுவனத்துக்கும் விற்றுள்ளனர்.
இதற்கும் மேலாக, தன்னிடம் உள்ள இந்த இசை உரிமைகள் அனைத்தையும் வேறு ஒரு நிறுவனத்துக்கு ரூ. 25 கோடிக்கு அந்த நிறுவனம் விற்கப்போவதாக தெரியவந்துள்ளது.
எனவே, இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள் ஆகியோரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள அந்த நிறுவனம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்" என்று கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



