கல்வி நிறுவனங்கள் கட்டாய நன்கொடை வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது ரூ. 50 லட்சம் அபராதமோ விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவன நிர்வாகியை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும் இந்தச் சட்டத் திருத்தம் வகை செய்யும்.
மாணவர்களிடமிருந்து கட்டாய நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு எதிரான இப்புதிய சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று(வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்தது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்தச் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தரமற்ற கல்வி நிறுவனங்களைத் தண்டிக்கவும் இப்புதிய சட்டம் வகை செய்கிறது. அத்தோடு, கல்வி நிறுவனத்தின் தகவல் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிறுவனங்களையும் தண்டிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.
"மாணவர்களிடம் நன்கொடை வசூலித்தால் அது கிரிமினல் குற்றமாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் குறிப்பேட்டில் (prospectus) குறிப்பிட்டுள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால் கல்வி தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்" என மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



