இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கலைகள் கதைகள் நம்பிக்கைப் பூக்கள் - லக்கி ஷாஜஹான்

நம்பிக்கைப் பூக்கள் - லக்கி ஷாஜஹான்

(கதாசிரியர் பற்றிய குறிப்பு:   ஒரு ஜீவநதியின் சங்கீதம் போன்று சொற்களை இசைத்துச் செல்லும் (இ)லக்கி(ய) ஷாஜஹானின் எழுத்துகள் - சோகத்தையும் கூட அப்படி எழுத முடியுமா என்ற ஆச்சரியத்தை அளித்தபடி வாசிப்பனுபவத்திற்கு வித்திடுகின்றன இச்சிறுகதையில்)

பதினோரு மணிக்குச் சில நொடிகள் இருந்த தருணத்தில் எல்லாவற்றையும் மூடி கம்ப்யூட்டரை அணைத்து விட்டு மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு எழுந்து போய் கார்டை பஞ்ச்சிட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன்.. சிலீரென பனி முகத்தில் அறைந்தது.. மனம் மட்டும் கனத்து போய் இருந்தது..சே.. என்னடா வாழ்க்கை இது! ஒரேடியாக அடிமனதிலிருந்து எழுந்த வெறுப்பு பெருமூச்சாக மாறி அனலாக சுவாசப்பட்டு வெளியேறியது..

சாலையில் சாரை சாரையாய் வாகனங்கள் சீறிக் கொண்டிருந்தன.. சௌதியில் இரவும் பகல் போல் தான்.. எங்குதான் போகிறார்கள் இந்த மக்கள்.. அல்லது எங்கிருந்துதான் வருகிறார்கள்.. கொஞ்சம் ஒதுங்கி நடக்கையில் மோதுவது போல் வந்துவிட்டு தன் கேம்ரியை ஒடித்து வளைத்து பறந்து போனான் ஒரு சௌதி குடிமகன்.. என் வாய் என்னையறியுமால் மோசமான வசவு வார்த்தை ஒன்றை வாரி இறைத்தது.. இவ்வளவு வேகமாய் போய் கடைசியில் ஒரு கறுப்பு தேநீர் அருந்திக் கொண்டு கொட்ட கொட்ட முழித்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கப் போகிறான்..இதற்கு என்ன வேகம் என்ன பாய்ச்சல்..? ஒரு வேளை இவன் வளர்ந்த முறை தப்போ...?

தபாப் சாலையின் சிக்னலை மதித்து வாகனங்கள் நின்றுகொண்டிருக்க, நான் ஊடாலே நடந்து பஸ் ஏறும் வழக்கமான இடத்துக்கு வந்தேன்.. ஏழு மணி நேரம் தொடர்ச்சியாய் கம்ப்யூட்டர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு வந்தது அசதியாய் இருந்தது.. அருகில் உரசியபடி வந்து நின்றது ஒரு டாக்ஸி... பாகிஸ்தானி ட்ரைவர் முகமன் சொல்லி "பத்தா ...?" என்றான்..

எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே என்ற பிரபலமான வாசகம் போல் நான் நின்றிருந்த சாலையில் போகும் அனைத்து வாகனங்களும் பெருவாரியாக பத்தா நோக்கியே போகும்.. நான் பத்தாவில்தான் தங்கியிருந்தேன்.. நான் தயக்கமாய் "பத்தா... ரியாலின் ???" என்றேன்..பொதுவாக அந்த இடத்திலிருந்து பத்தாவுக்கு டாக்ஸிகளில் பெறப்படும் கட்டணம் பத்து ரியால். நானோ இரண்டு ரியால் பயணி.. அரைமணிக்கு ஒரு கோஸ்டர் வீதம் பத்தாவிலிருந்து தல்லா வரை சௌதிகள் அழைத்துப் போகும் மினி பஸ் ( கோயில்மாடு என்று நம்மவர்கள் அதற்கு பெயரிட்டிருக்கிறார்கள்.. எந்த சிக்னலையும் மதிக்க மாட்டார்கள்.. எந்த சாலை விதிகள் படியும் பயணிக்க மாட்டார்கள் ) மற்றும் மெகா பஸ் வசதி உண்டு. சமயங்களில் ஓரிடத்திலிருந்து ரெண்டு மூன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு இது போன்ற டாக்ஸிகள் இரண்டு ரியாலுக்குக் கிடைக்கும்..முன்னே ஒருவரும் ( சமயங்களில் இருவராக ) பின்னே நால்வராக பொதிக்கப்பட்டு கெட்டியாய் அழுத்தப்பட்டு பயணிக்க வேண்டும். இரண்டு ரூபாய்க்கு பத்தாவுக்குப் பிரயாணிக்கும் பயணிகளுக்கு டாக்ஸி ட்ரைவர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும்.. ஏனெனில் இரண்டு ரூபாய்க்கு பஸ் ஓட்டும் பஸ் ட்ரைவர்களுக்கு இது போல் டிக்கெட் ஏற்றுபவர்களை கண்டால் அறவே பிடிக்காது.. இறங்கி வந்து சில நேரங்களில் அப்படி பயணிகளை ஏற்றும் ட்ரைவர்களை அடித்த சம்பவமும் உண்டு..தவிர போக்குவரத்து விதிகள் அல்லது சௌதி சட்டப்படி இப்படி டாக்ஸி பயணிகள் ஏற்றுவது குற்றம். இருப்பினும் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.. சட்ட மீறல்கள் என்பது எல்லா தேசத்திலும் இருக்கிறது.. அதில் த்ரில்லும் இருக்கிறது என்று ஒருமுறை ஒரு ட்ரைவர் சொல்ல கேட்டிருக்கிறேன்..மாட்டினால் முன்னூறு ரியால் அபராதமும் ஒரு நாள் சிறைவாசமும் என்பதும் தெரியும்.

டாக்ஸி ட்ரைவர் சம்மதித்து அவசரப்படுத்த நான் முன்னால் ஏறிக் கொண்டேன்.. மெதுவாய் காரை நகர்த்திய ட்ரைவர் கேட்டான்...

ஹிந்தி...?

'ம்' என ஒற்றை சொல்லோடு முடித்துக் கொண்டேன்..

நான் இருந்த மன நிலையில் தொடர்ந்து பேச விரும்பவில்லை.. ஆனால் ட்ரைவர் வளவளத்த கேஸ் போலும், ஏதேதோ கேட்டுக் கொண்டே வர நான் பட்டும் படாமலும் வலுக்கட்டாயத்தாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டு வந்தேன்... மனம் வேறொரு சிந்தனையில் வேறொரு நிகழ்வை திருப்பி திருப்பி திரையிட்டுக் கொண்டிருந்தது..

'ஊருக்கு வர்ரதுன்னா வேற வழியில்லையா..?' ஆயிரத்தி நூற்றி பதினேழாவது முறையாக கேட்கிறாள்.

'ம்ஹும். ஒண்ணு பதினஞ்சு நாள் லீவுல வரணும்..இல்லைன்னா முடிச்சிட்டுதான் வரணும்..'

'அப்ப நான் செத்ததுக்கப்புறம் தான் ஊருக்கு வருவீங்க அப்படித்தானே? திடீரென குரல் உச்சஸ்தாயில் உயர்ந்தது...'

'இல்லைடாம்மா.. நான் என்ன சொல்றேன்னா..'

'நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.. நான் போனை வச்சிடறேன் ' படீரென ரிசீவர் அறைந்து சாத்தப்பட்டது.

என்ன சகோதரா சோர்ந்து காணப்படுகிறாய்.. இன்றைய பணி மிக கஷ்டமா டாக்ஸி ட்ரைவரின் குரல் திடீரென நினைவலையை அறுத்துவிட கார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சிக்னலில் பச்சைக்காக நின்றது..

"ஆமாம்.. " ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே...

"நினைத்தேன் சகோதரா.. உன்னைப்போல எத்தனையோ லட்சம் பேர் இப்படி கஷ்டப்படுகிறார்கள் இங்கே... என்ன வேலை பார்க்கிறாய் நல்ல வேலைதானே...?"

"ஆனா நிறைய பேர் நல்ல வேலைல இருக்காங்களே..ஒண்ணுமே தெரியாம" மனம் சட்டென இன்னொரு உரையாடலை ஆரம்பித்து வைத்தது..

"அவங்க இருக்காங்க.. உனக்குதான் ஆங்கிலமே பேச வரலையே.. உன்னோட சின்னவன் அவன் எப்படி பேசறான்.. " சித்தப்பா இன்னொரு பையனை குறிப்பிட்டு பேசினார்..

"அவன் எல்.கே.ஜிலேர்ந்து இங்கிலீஷ் மீடியத்திலே படிச்சான்.. நான் பன்னெண்டாவது வரைக்கும் தமிழ் மீடியம்தானே படிச்சேன்.."

புத்திசாலிதனமாய் பேசுவதாய் சொல்ல அதே வேகத்தில் கேள்வி வந்து அறைந்தது காதில் சித்தப்பாவிடமிருந்து..

"நான் என்ன படிச்சேன்.. நான் பேசலை...?"

"உங்களுக்கு இருபத்தைந்து வருட சௌதி அனுபவம்" சொல்ல வார்த்தை தொண்டை வரை வந்து நின்று கொண்டது.. உரையாடல் தொடர்ந்தால் அடுத்து வேற பதிலால் அவமானப்பட நேரிடும்.

"உன்னால என்ன வேலைதான் பார்க்க முடியும்னு நினைக்கிறே.. ?" சித்தப்பா கூர்மையாக பார்த்தார்.

உன்னைத்தான் சகோதரா.. என்ன வேலை பார்க்கிறாய்..? கேட்டுக்கொண்டே காரை நகர்த்தினான் ட்ரைவர்.

என்ன வேலையாய் இருந்தாலும் செய்ய ரெடியா இருந்துக்கோ. அதான் சௌதியில் நல்லது. ஊரிலேயே அனுபவஸ்தர்களால் பாடம் அறிவுறுத்தப்பட்டது..

ஆனால் நினைத்த அளவுக்கு சௌதி இல்லை. நேர்முகத் தேர்வில் அனுபவம் பற்றி அதிகம் கேட்கப்பட்டது. அல்லது அரபு மொழி பரிச்சயம் பற்றி கேட்கப்பட்டது.. இரண்டிலும் நான் சொன்ன பதில்கள் எந்த நிர்வாகத்துக்கும் திருப்தி தராது என்பது உடனேயே தெரிந்து போனது.

தற்காலிகமாக ஒரு இடத்தில் வேலை கிடைக்க அந்த அரேபிய முதலாளி இரண்டு மாதம் சம்பளம் தராமல் கிடப்பில் போட்டான்..சம்பந்தமே இல்லாத வேலைகளை ஏவினான்.. பணி நேரத்தை அதிகப்படுத்தினான்.. மூன்று மாதத்திற்குப் பின்னால் மொத்த சம்பளப்பணத்தில் நான்கின் ஒரு பகுதி தரப்பட அன்றே அங்கிருந்து விலகியாகி விட்டது..

திங்கறதுக்கு சோறும் படுக்கறதுக்கு இடமும் கிடைச்சா சௌதில வேலைக்கு போவ மனசே வராது தம்பி..இன்னொரு தூரத்து உறவினர் எல்லோரும் முன்பாக வைத்து ஏளனப்படுத்த மனம் உடைந்து போனது.

முன்னிலும் வேலை தேடும் படலம் இன்னும் வெறியோடு தொடங்கியது.. இந்த வேலை கிடைக்க நிறைய கொள்கைகளை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும்படி ஆயிற்று.. பதினோரு மணி நேர வேலை என்பது கொஞ்சம் அவஸ்தையாயிருந்தாலும் இதுதான் நிதர்சனம் என்ற உண்மை விளங்கி கொள்ள மனம் அமைதியாக ஏற்றுக் கொண்டு விட்டது. இதோ மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.. கம்ப்யூட்டரைப் போலவே இயந்திர கதியில்...

"ஹலோ என்ன தூக்கமா..?" டாக்ஸி ட்ரைவர் கிளவுஸ் அணிந்த கையால் தொடை தட்டி கேட்டான்.. சே என்ன குளிர்..? இது போல் ஒரு கிளவுஸ் அணிந்து கொண்டால் கொஞ்சம் தேவலாம் போலிருக்கும். வெளியே பார்த்தேன்.. சவூதி அமெரிக்க வங்கியின் தலைமையகத்தை டாக்ஸி கடந்து கொண்டிருந்தது..இதில் கூட ஒரு தமிழர் தாம் தொழில்நுட்ப தலைவராம்..அணுகி பார்த்திருக்கலாமோ..?

"இல்லை தோழரே.. என்ன கேட்டீர்கள் என்ன வேலை பார்க்கிறேன் என்றா... உங்களை போல் இவ்வளவு சந்தோஷமான பணி அல்ல.. கொஞ்சம் கஷ்டமானது.." நான் பார்க்கும் வேலை பற்றி சொன்னேன்..

சிரித்தான் டாக்ஸி ட்ரைவர். அதில் 'என் வேலை பற்றி உனக்கென்ன தெரியும்..?' என்ற அலட்சியம் இருந்தது.. "நண்பனே.. ரியாத்தின் தற்போதைய டாக்ஸி ட்ரைவர்கள் நிலமை பற்றி எதாவது உனக்கு தெரியுமா..? ஒரு நாள் நான் வண்டி எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் தினமும் நூற்றி அறுபது ரியால் என் முதலாளிக்குத் தர வேண்டும்.. சவூதி அரசு எடுக்கும் முடிவுகள் வேறு கலவரத்தைத் தருகிறது..இந்தப் பணி மொத்தமும் இந்த நாட்டு குடிமகன்கள் மட்டுமே இனி செய்யக்கூடும் என அடிக்கடி சொல்லி வயிற்றில் புளி கரைக்கிறார்கள்.. தவிர இப்போது இங்கு டாக்ஸிகளின் வரத்தும் அதிகமாகி விட்டது.. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு உள்ள தூரத்தின் அளவை விட அதற்கிடையே ஓடும் டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகம்.. இருந்தும் நான் ஏன் இதை செய்கிறேன் தெரியுமா..?

அவனுக்கும் துக்கங்கள் இருந்தன.. ஊரில் திருமணமாகாத நான்கு சகோதரிகள்.. அப்பா வைத்து விட்டு செத்து போன நான்கு லட்சத்துக்கு மேலான கடன் என்று ஒரு சின்ன பட்டியல் ஒப்பித்தான்.. சமீபத்தில் இங்கொரு விபத்தில் சிக்கி வெகு அதிகமாய் செலவாகி அதில் கொஞ்சம் கடன் சுமை ஏறி இருப்பதை எல்லாம் விலாவரியாகவே சொன்னான்.

ஆனாலும் நண்பனே.. இந்தச் சோகங்களை எல்லாம் நான் பழக்கி கொண்டு விட்டேன்.. காரணம் எனக்கு இருக்கும் பிரச்னைகளைப் பற்றி நான் நினைத்து கொண்டே இருந்தால் என்னால் உற்சாகமாக செயல்பட முடியாது.. உற்சாகமின்றி செயல்பட்டால் அது என் தொழிலுக்குச் சரியானதல்ல... எப்போதும் நான் என்னுடைய கஷ்டங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் இதோ இப்போது கூட கவனம் தடுமாறி நீயும் நானும் போக இருக்கும் இடத்திற்குப் போகமுடியாமல் போய்விடும்..

சிரித்தபடியே சொன்ன அந்த பாகிஸ்தானி ட்ரைவர்க்கு என் வயதுக்கு பத்து வயது அதிகமிருக்கலாம்.. இன்னும் பல மனதுக்குக் கனமான விஷயங்கள் சொன்னான்.. இவ்வளவு இருந்தும் உன் குடும்பமும் என் குடும்பமும் நம் நாட்டில் சந்தோஷமாக வயிறாற உண்டு நமக்காக நம் பொருட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அதற்காகவது இந்தப் பூமிக்கு நன்றி சொல் நண்பா.. புகழ் அனைத்தும் இறைவனுக்கே என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டே வேலையைப் பார்.. அவன் சொல்ல சொல்ல மனம் லேசாகிக் கொண்டே போனது..இப்போதெல்லாம் இந்த மாதிரி யாராவது பேசினால் மிக ஆறுதலாக இருக்கிறது.

இறங்கப்போகும் இடம் வந்தவுடன் காசு எடுத்து கொடுத்து விட்டு இறங்க முற்பட்டேன்..

உன்னோடு பேசிக் கொண்டிருந்தது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.. நன்றி தோழனே நான் முகமன் கூறி அவனுடன் விடைப்பெற்றுக் கொள்ளும் பொருட்டு கை நீட்டினேன்..

பதிலுக்கு முகமன் கூறி நிதானமாய் இடக்கையால் கிளவுஸ் கழட்டி என்னிடம் வலது கையை நீட்டினான்..விரல்கள் இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் கால் இஞ்சுக்குச் சின்ன சதை குப்பிகள் மட்டுமே நீட்டிக் கொண்டிருக்க கடைத்தெரு வெளிச்சத்தில் அவன் கை மொண்ணையாய் ஒழுங்கற்ற வடிவத்தில் என் உறுதியான விரல்களைத் தொட்டு கையைப் பற்றிக் குலுக்கியது.

- கதாசிரியர்: லக்கி ஷாஜஹான்.

Comments  

 
+4 # தேவன் 2011-12-31 12:25
திரு லக்கி ஷாஜஹான்,

புத்தாண்டிற்கு நம்பிக்கையை ஊட்டும் ஒரு கனமான சிறு கதையை வழங்கியுள்ளார். வாசித்து முடிக்கையில் அது நம்பிக்கை ஒளியை காட்டுகிறது.

வாழ்த்துக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # சுவாதி 2011-12-31 12:36
லக்கி! நகைச்சுவையாகப் பேசியே பரிச்சயமாயிருந்த உங்களிடமிருந்து இத்தனை கனமான படைப்பு..! கதையின் தாக்கம் மறைய நெடு நேரம் எடுக்கும் எனக்கு..கூடவே நம்ம லக்கி தானா இதை எழுதியது என்ற வியப்பும்... :):)

வாழ்த்துகள்!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # மகேஷ் 2011-12-31 12:50
அருமையான கதை. இறுதி வரி நெஞ்சம் நெகிழ வைத்தது. ஒவ்வொருவருக்கும் நிச்சயம் நம்பிக்கையை ஊட்டும். நன்றி ஷாஜஹான்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Mohammed Meera Sahib 2011-12-31 12:52
சவூதியில் சம்பாதிக்க வந்திருப்பவர்களின் யதார்த்த நிலையை விலாவாரியாக மணக்க வைக்கிறது நம்பிக்கை பூக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # லாவண்யா 2011-12-31 13:09
நம்பிக்கைப் பூக்கள். நன்றி
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ஜாஸ்மின் 2011-12-31 13:19
இறுதிவரை வளைகுடா வாழ்க்கையில் ஒரு சராசரி மனிதன் நேரிடும் மனஓட்டத்தை அழகாக கொண்டு சென்று, இறுதியில் நம்பிக்கை ஒளியினைத் தரும் வகையில் முடித்தது சிறப்பு.

நல்ல கதை.

வாழ்த்துகள் லக்கி.

- ஜாஸ்மின்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # மீராஸா 2011-12-31 13:21
எங்களைப் போன்ற புது கல்ஃப் வாழ் ஜீவன்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் படைப்பு, வாழ்த்துக்கள் ஷாஜஹான் அவர்களுக்கு
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # அப்துல் கரீம் 2011-12-31 13:22
நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரும் கதை.

லக்கி ஷாஜஹான் அவர்களுக்கு நன்றி
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # முஸ்தபா 2011-12-31 15:02
ஆனாலும் நண்பனே.. இந்தச் சோகங்களை எல்லாம் நான் பழக்கி கொண்டு விட்டேன்.. காரணம் எனக்கு இருக்கும் பிரச்னைகளைப் பற்றி நான் நினைத்து கொண்டே இருந்தால் என்னால் உற்சாகமாக செயல்பட முடியாது.. உற்சாகமின்றி செயல்பட்டால் அது என் தொழிலுக்குச் சரியானதல்ல... எப்போதும் நான் என்னுடைய கஷ்டங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் இதோ இப்போது கூட கவனம் தடுமாறி நீயும் நானும் போக இருக்கும் இடத்திற்குப் போகமுடியாமல் போய்விடும்..
சிந்திக்க வேண்டிய வார்த்தைகள்.

Read more about நம்பிக்கைப் பூக்கள் - லக்கி ஷாஜஹான் [1842] | கதை | கலை at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # இம்தியாஸ் 2011-12-31 22:20
ரியாத் தமிழ்ச் சங்க குழுமத்தில் பதிவாகி ரியாத்வாழ் தமிழர்களால் பாராட்டப்பட்ட நம்பிக்கையூட்டும் சிறுகதை.

மீள்பதிவு செய்தமைக்கு நன்றி ஷாஜஹான்...

அன்புடன்,
இம்தியாஸ்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Anis Ahamed 2012-01-01 03:20
நம்மை விட அதிகமான கஷ்டங்கள் உடையவர்களை நினைவுட்டிருக்கிறது, இதயத்தை தட்டி எழுப்பும் நம்பிக்கை பூக்கள்.
சகோ:ஷாஜஹான் அவர்களுக்கு நன்றி.
அனிஸ்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # அஷ்ரப் 2012-01-01 14:29
இந்த கதையை படித்தபோது கடந்த பத்துவருடத்துக்கு முன்பு நான் பட்டகஷ்ட நிலை என்முன் நிழலாடியது,sr 45o ரியால் சம்பளம் 14மணிநேரவேலை விடுமுறை என்றால் அது :உறங்கும் "நேரம் மட்டுமே,மேலும் இக்காமா-மற்றும் நாடுசெல்வதற்க்கான (ரீ என் டரி-விஷா அடிக்கும்) செலவுகள் உட்பட அனைத்தும் எம் தலையிலேயே விழுந்தன. ஆனால் அன்று கஷ்டபட்டேன் இன்று இறையருளால் நலமுடன் இருக்கிறேன்.அல்ஹம்துலில்லாஹ்

குறிப்பு
இன்றும் 12மணிநேர வேலை விடுமுறை என்பது??????
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Dravidan 2012-01-02 14:59
one word comment

" EXCELLENT "
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Sikkan 2012-01-03 13:16
Excellent way of narration and beautiful lesson.

More we expect from you Mr.Lucky
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # John 2012-01-03 22:28
Very Nice. Heart touching ending
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # அபு ஹிஷாம் 2012-01-07 01:58
நண்பர் ஷாஜகனின் இந்த சிறுகதை
சோர்ந்து கிடந்த உள்ளங்களுக்கு உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது. வாழ்வில் யாருக்குத்தான் பிரச்சனைகள் இல்லை, அதையே நினைத்து இருந்தால் நம்முடைய செயல்களில் கவனம் இல்லாமல் போய்விடும் என்பதை உணர்த்த கூடியதாக இருந்தது..

நன்றி..

அபு ஹிஷாம்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # masila 2012-01-07 17:51
Theme is younger than Sajji but the style is fluid
with an undercurrent of pathos
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # abu amm 2012-01-10 22:53
yethaarthamaana unmai nalla pathivu,
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # rameshmurugan 2012-01-11 11:29
An excellent learning concept from a simple thought, thank you lucky
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Leo 2012-01-12 18:42
Very good article Mr.lucky.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Sikkan 2012-01-15 14:26
Quoting Leo:
Very good article Mr.lucky.


Article? :lol:
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # wilson 2012-01-16 12:14
நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டும் படைப்பு
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sinna 2012-01-18 11:40
Nalla arthamulla kathai valthukkal Lacky shajahan
பதில் | Reply with quote | Quote
 
 
0 # shajahan.s 2012-02-03 22:53
என்ன ஆச்சர்யம் ஆனால் உண்மை... 1994 முதல் 2007 வரை நானும் சவுதியில் தான் பணிபுரிந்தேன். அதிலும் என்னுடைய ஆரம்ப காலமான சிலவருடங்கள் ப்ரி விசா என்று சொல்லக்கூடிய பல்வேறு வேலைகள். இந்த கதை என்னை மிகவும் பாதித்தது இக் கதையின் நிகழ்விடம் சவுதிஅரேபியா என்பதாலா... அல்லது எனது பெயரும் இந்த கதாசிரியரின் பெயர் என்பதாலா... எப்படி இருப்பினும் என் நினைவுகள் முன்னோக்கி சென்றதே இக்கதையின் வெற்றி... வாழ்த்துக்கள்..
பதில் | Reply with quote | Quote
 
 
0 # shajahan.s 2012-02-03 23:03
அதிலும் அந்த பாக்கிஸ்தானிய லிமோசின் டிரைவர்... நம் ஊர் சலூன் கடைகளில் வெட்டிபேச்சுக்களும், சினிமா அரசியல் என்று வாழ்க்கைக்கு பயன்படாத விசயங்கள் அலசப்படும். ஆனால் வெளிநாடுவாழ் பாக்கிஸ்தான்,பங்களாதேஷ்,சூடான் , எதியோப்பியா வாடகைக்காரோட்டிகளிடம் நம் வாழ்க்கையை படிக்கலாம்... இது நிதர்சன உண்மை...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ரமீஜா 2012-02-05 13:32
வாழ்க்கையை உணர்த்தும் காவியம், அருமை
பதில் | Reply with quote | Quote
 
 
0 # அப்துல் ரஸ்ஸாக் 2012-02-07 02:23
அரபு மண்ணில் வேலைபார்த்து களைத்து போபவர்களைவிட சொந்தங்களை பிரிந்து மனச் சோர்வில் களைத்து போவர்கள்தான் அதிகம் .அப்படி களைத்துபோன உள்ளங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய மனதில் தாக்கத்தை ஏற்படுதிய சிறுகதை.

வாழ்த்துக்கள் ஷாஜஹான்.

ரஸ்ஸாக் .
-துபை
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Mohamed Shafee 2012-03-08 17:00
இது என் சகோதரன் லக்கி ஷாஜகனின் படைப்பு
தமிழ் மொழியும் நடனமாடும் என்பதற்கு இவர் வரிகள் சான்று

அன்புடன் - முஹமது ஷபீ
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: