இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி பள்ளிக்கூடம் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 8,462 பேர் நியமனம்: முதல்-அமைச்சர் உத்தரவு!

பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 8,462 பேர் நியமனம்: முதல்-அமைச்சர் உத்தரவு!

பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 8,462  பேரை அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற    வள்ளுவன் வாக்கின்படி, தரமான கல்வியை மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அளித்து, அதன் மூலம் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில், மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, அதிலும் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, உதவித்தொகை வழங்குவது, மிதிவண்டி வழங்குவது, மடிக்கணினி வழங்குவது போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி, ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வருகிறது.

மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய இனிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

மேலும், மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டுமானால் தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதால், முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தேவையான ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வகையில், அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரப்படி, நடப்பு கல்வியாண்டில் (2011-12) அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும், கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 181 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவாகும். இதுமட்டுமல்லாமல், அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, கூடுதலாக 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 45 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவாகும். மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தி அவர்களை வருங்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்த்த பாடுபடும் ஆசிரியர்களின் நலன் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.1988க்குப் பிறகு பணிபுரிந்த பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை/ சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அரசுக்கு 24 கோடியே 25 லட்சத்து 44 ஆயிரத்து 210 ரூபாய் செலவு ஏற்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்கள் 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித்தகுதி மற்றும் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000  ரூபாயாக உயர்த்தி வழங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், மாணவர்கள் தரமான கல்வியைப் பெற தகுந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதுடன், தகுதியானோர் ஆசிரியர் பணி பெறவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-க.கா.செ

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: