கேரளாவில் வரலாறு காணாத மழைபொழிவு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளில் ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட அனைவரும் கேரள அரசோடு இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளியன்று கேரளாவின் இடுக்கி அணையின் 5-வது ஷட்டர் திறக்கப்பட்டது. அப்போது தண்ணீர் காட்டாற்று வெள்ளத்தை போல சீற்றத்துடன் பொங்கி வந்தது.
அப்போது செருதோனி என்ற பாலத்தின் ஒரு முனையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்த ஒருவர் உதவி கேட்டு கத்தியுள்ளார். அப்போது மறுமுனையில் நின்று கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படையின் வீரர் கண்ணையா குமார் நொடிப் பொழுதில் மறுபக்கம் சென்று குழந்தையை தூக்கி கொண்டு அங்கிருந்த இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு ஓடி வந்தார்.
அவர்கள் 3 பேரும் பாலத்தை கடந்து மறுபக்கம் சேர்ந்த சில நொடிகளில் செருதோனி பாலம் அடித்து செல்லப்பட்டது. உயிரைப் பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய கண்ணையா குமாரின் இந்த வீரச் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.