ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த ஹரிபந்து ஹகன் என்பவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு பழைய ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி ஓட்டி வந்திருக்கிறார். குடிபோதையில் நேற்று வாகனம் ஒட்டியபோது போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக் கொண்ட ஹகன், வழக்கம்போல் நூறு ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுவார்கள் என தப்புக் கணக்கு போட்டார். ஆனால் புதிய சட்டப்படி காவலர் போட்ட அபராதக் கணக்கு 47,500 ரூபாய்.
வண்டியே 25 ஆயிரம் ரூபாய்தான் அபராதம் 47, 500 ரூபாயா என புலம்பிக் கொண்டிருக்கிறார் ஹகன். இதேபோல, ஹரியானாவில் டிராக்டர் ஓட்டுநர் ஒருவர் 59 ஆயிரம் ரூபாய் அபராத ரசீதோடு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.
இருசக்கர வாகனங்களை ஓட்டி விதிகளை மீறி மாட்டிக் கொள்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். 23 ஆயிரம் ரூபாய், 24 ஆயிரம் ரூபாய் என அபராதம் விதிக்கப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் எங்கள் மாதச் சம்பளமே அவ்வளவு கிடையாதே என அழுது புலம்புகிறார்கள். இதனால் ஹரியானாவில் போக்குவரத்துக் காவலர்களைக் கண்டாலே வாகன ஓட்டிகள் பதறியடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.