மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!

Share this News:

காந்திநகர் (26 ஜூன் 2022): குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமுக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று முன் தினம் தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் இறந்தனர். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் மோதல்கள் வெடித்தன.

இதில் 3000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. அப்போதைய முதல்வர் மோடி உள்பட 64 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத்தும் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றதில் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்பி ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் நேற்று மும்பையின் ஜூஹூவில் உள்ள டீஸ்டா செதல்வாட் வீட்டுக்கு குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று அவரை கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply