இந்தியாவுடனான வர்த்தக உறவு துண்டிப்பு – தாலிபான் அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி (19 ஆக 2021): இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உறவை துண்டிப்பதாக தாலிபான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக அமெரிக்க ஆதரவு அரச படைகளுக்கும், அங்கு 2001க்கு முன்பு ஆட்சியில் இருந்த தாலிபன்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை எந்த சண்டையுமின்றி கைப்பற்றியதால் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்றிய பின்னர், போர் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலை உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உறவை துண்டிப்பதாக தாலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதை இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) உறுதி செய்துள்ளது.

இந்தியா ஆப்கானிஸ்தானுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டில். ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று.

2021 க்குள், ஆப்கானிஸ்தானுக்கான எங்கள் ஏற்றுமதி சுமார் $ 835 மில்லியன் ஆகும். அதேபோல வர்த்தகத்திற்கு கூடுதலாக, இந்தியா ஆப்கானிஸ்தானில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை கொண்டுள்ளது. இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே வர்த்தக அளவில், சுமார் 400 திட்டங்கள் உள்ளன. அவற்றில் சில இன்னும் நடந்து கொண்டிருப்பதாக அஜய் சஹாய் கூறினார்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போராட்டங்கள் பரவி வருகின்றன. பஞ்சசீர் மாகாணத்தில் மோதல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜலாலாபாத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது தலிபான் ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை தலிபான் முன்னெடுத்துள்ளது. முல்லா அப்துல்கனி பரதர் உள்ளிட்ட தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது..


Share this News:

Leave a Reply