கான்பூர் (02 ஜூன் 2020): முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் கொரோனாவை பரப்பியவர்கள் அவர்கள்தான் என்றும் விஷக்கருத்தை பரப்பிய டாக்டர் ஆர்த்தி லால்சந்தானியின் மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன.
இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள் வைரஸ் பரப்ப வந்த பயங்கரவாதிகள்” என்று கூறுகிறார்.
மேலும் “அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் ஆனால் நாங்கள் முஸ்லிம்களுக்கு விஐபி சிகிச்சை அளித்து வருகிறோம், எங்கள் வளங்களை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம் ” என்று ஆர்த்தி லால்சந்தானி கூறுகிறார்.
மேலும் “தனிமை சிறையில் வைக்கப்பட வேண்டியவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்.” என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையி மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானியின் பேச்சை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள சமூக ஆர்வலர்கள், மற்றும் எதிர் கட்சியினர் அவரின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
மருத்துவ மற்றும் விஞ்ஞானிகள் மன்றத்தின் உறுப்பினர் பேராசிரியர் (டாக்டர்) விகாஸ் பாஜ்பாய் கூறுகையில், “லால்சந்தானி போன்றவர்கள் நாட்டிற்கு பெரும் நோய்கள், இவர்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்வா அமைப்பினரால் வார்த்தெடுக்கப் பட்டவர்கள், இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க இயலாத அரசு அதன் தோல்வியை திசை திருப்ப இவர்களைப் போன்றவர்கள் பேசும் பேச்சுக்கள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் பாத்தி கூறுகையில், “லால்சந்தானி போன்றவர்கள் மருத்துவத்துறையின் ஆபத்தானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்டவர்களும் லால்சந்தானியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கான்பூரைச் சேர்ந்த சிபிஐ (எம்) பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, “டாக்டர் லால்சந்தானி உடனடியாக அவரது பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும், மேலும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.