புதுடில்லி:”லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்வதற்காக மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இந்திய – அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பேசியதாவது:ஒரு சில வெளிநாடுகளில் இருப்பது போல், நம் நாட்டிலும் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால், மின்சார ரயில்கள் இயங்குவது போல், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் இயங்கும். லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளின் மேல், மின்சாரம் செல்வதற்கான கம்பிகள் பொருத்தப்படும். அதன் வாயிலாக வாகனங்கள் இயங்கும். இதற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மற்றும் காற்றாலை வாயிலாக தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.