இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பது சிரமம் – எச்சரிக்கை அறிக்கை!

Share this News:

புதுடெல்லி (23 ஆக 2021): நாட்டில் கோவிட் மூன்றாவது அலை அக்டோபரில் தாக்கலாம் என்றும், தற்போதுள்ள வசதிகள் மூன்றாவது அலையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் தாக்கியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது அலை அடுத்த மாதம் தாக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அறிக்கை ஒன்றை பி ரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது.

அதில், தற்போதுள்ள வசதிகள் மூன்றாவது அலையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும், மூன்றாவது அலை பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் தாக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, குழந்தைகளுக்கான கோவிட் சிகிச்சை வசதிகளை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும். பிற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 82% குழந்தை மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. சமூக சுகாதார மையங்களில் 63% காலியிடங்கள் உள்ளன. இது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு கோவிட் அலைகளிலிருந்து ஏற்படுத்திய பாதிப்பை உணர்ந்து அரசு தயாராக வேண்டும் என்று அந்த குழுவின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

CSIR-IGIB இயக்குனர் அனுராக் அகர்வால் அடங்கிய நிபுணர் குழுவால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. குழு உறுப்பினர்களாக முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் எம்சி மிஸ்ரா, இந்திய குழந்தை மருத்துவர்கள் சங்க தலைவர் நவீன் தாக்கரே மற்றும் வேலூரின் சிஎம்சி பேராசிரியர் ககன்தீப் காங் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் பெற்றுள்ளனர்.


Share this News:

Leave a Reply