உடுப்பி (23 பிப் 2022): பள்ளி கல்லுரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளவர்களில் ஒருவரான ஹஸ்ரா ஷிஃபாவின் தந்தைக்கு சொந்தமான உணவகத்தின் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹிஜாபுக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஹிஜாப் வழக்கின் மனுதாரர்களில் ஷிஃபாவும் ஒருவர். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் தான் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இந்நிலையில் மனுதாரர் ஹஸ்ரா ஷிஃபாவின் சகோதரர் உணவகத்தை மூடும் போது அங்கு வந்த கும்பல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நாசகாரச் செயலால் உணவகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன என்று உடுப்பி காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுவர்தன் கூறியதை மேற்கோள் காட்டி தி ஹிந்து இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஷிஃபா குற்றம் சாட்டினாலும், இவ்விவகாரத்தில் இதுவரை எந்தத் தெளிவும் இல்லை. இது குறித்து மல்பே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.