புதுடெல்லி (10 பிப் 2022): ஹிஜாப் தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றுவதற்கான மனுவை பட்டியலிட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்துள்ளார். இதனை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்த உத்தரவில், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கைப்பற்றியுள்ளதாகவும், விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது.
வழக்கை மாற்றக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கும் கோரி, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் வைத்துள்ள கோரிக்கையில், ஹிஜாப் விவகாரத்தினால் பள்ளி, கல்லூரிகள் மூடிக்கிடக்கின்றன.. பெண்கள் தாக்கப்படுகிறார்கள். இது நாடு முழுவதும் பரவி வருகிறது.
ஆரம்பத்தில், கர்நாடகாவில் மட்டும் தொடங்க்கிய பிரச்சனை நாடெங்கும் பரவி வருகிறது. இப்போது நாடு முழுவதிலுமிருந்து குழந்தைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தேர்வுகளுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.என்று சிபல் அவரது கோரிக்கையில் கூறியுள்ளார்..
இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, தயவுசெய்து காத்திருக்கவும். எங்களால் எதுவும் செய்ய முடியாது. உயர்நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அதை ஏன் நாம் உடனடியாக ஆராய வேண்டும். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கட்டும். இன்றும் இந்த விவகாரம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதுதான் தகவல். எனவே உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து நாம் விசாரிக்கலாம் என்றனர்.