வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முறை!

Share this News:

புதுடெல்லி (19 டிச 2021): வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே நபர் வெவ்வேறு தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைத் தடுக்க இந்த நடைமுறை உதவும் என சொல்லப்பட்டுள்ளது.

தேசிய வாக்காளர் சேவையகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு என மூன்று விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

தேசிய வாக்காளர் சேவையகத்தின் வலைதளம் மூலமாக இணைப்பதற்கான வழிகள்!

https://voterportal.eci.gov.in/ என்ற வலைதளபக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண் போன்ற விவரங்களைக் கொண்டு உள்நுழைய வேண்டும் அல்லது புதிதாக கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக வாக்காளின் பெயர், ஊர், மாவட்டம், மாநிலம் உட்பட அனைத்து சுய விவரங்களையும் கொடுக்க வேண்டும்.

பின்னர் ‘Search’ பொத்தானைச் சொடுக்கி, பயனர்கள் கொடுத்துள்ள விவரங்களும் அரசின் தரவுகளில் உள்ள விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சரியாக இருக்கும் பட்சத்தில் ‘Feed Aadhaar No’ என்ற பொத்தானைச் சொடுக்கி ஆதாரில் உள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்.

பின்னர் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து ‘Submit’ கொடுக்க வேண்டும்.

இறுதியாக பயனரின் விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திரையில் தோன்றும்.

இதே போல 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமாகவும், 1950 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்வதன் மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply