ஐதராபாத் (18 ஜன 2022): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியின் படத்தை , ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் மார்பிங் செய்து பரப்பியதாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
படம் வைரலானதை அடுத்து, AIMIM தலைவர் ஷேக் முயீனுதீன் அப்ரார், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்க்கும் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புகாரை அடுத்து, இந்த புகைப்படம் தொடர்பாக ஐதராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங், மோகன் பகவத்துடன் இருக்கும் அதே புகைப்படம் சர்ச்சையானது. உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கடும் போட்டியில் இருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர், ஆர் எஸ் எஸ் தலைவருடன் இருந்ததால் பரபரப்பானது. படத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மோகன் பகவத்தின் ஆசிகளைப் பெறுவதையும், முலாயம் பார்த்துக் கொண்டிருப்பதையும் அது காட்டியதும் குறிப்பிடத்தக்கது.