புதுடெல்லி (07 மார்ச் 2022): முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தப்போவதாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்ஆர்எம்) தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் குழந்தை திருமண தடை (திருத்த) மசோதா 2021ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்ஆர்எம் தேசிய ஒருங்கிணைப்பாளர் முகமது அப்சல் கூறுகையில், முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தனது குழு வருகை தரும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், சமூகத்தை ஆட்டிப்படைக்கும் பல்வேறு பிரச்சினைகளான முத்தலாக், பலதார மணம், ஹிஜாப், பருவமடைந்த பெண்களின் திருமணம் போன்றவற்றின் விளைவுகள் குறித்து முஸ்லிம் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்த விவகாரங்கள் குறித்து நாடு தழுவிய விவாதம் நடத்த விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் அனைத்து பிரிவினருடனும் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றார்,
மேலும் “மஞ்சின் பல்வேறு பிரிவுகள் சமூகத்தின் பல்வேறு பிரிவினரை ஒன்றிணைத்து சீர்திருத்தத் திட்டத்தைத் தயாரித்து, அவற்றை நாடு முழுவதும் வரிசையாக செயல்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.