காத்மண்டு (19 ஜூலை 2020): இராமர் நேபாளத்தில் பிறந்ததை தொல்லியல் அகழாய்வு மூலம் நிரூபிக்கவுள்ளதாக நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, இந்து கடவுளான இராமர் அவதரித்த இடம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. அந்த இராமனை முன் வைத்து பாஜக ஆட்சிக் கட்டில் ஏறியது. ஆனால் இராமர் பிறந்த அயோத்தி நகரம் இருப்பது நேபாள நாட்டின் எல்லையோர நகரமான பிர்கஞ்ச் அருகேயுள்ள தோரி கிராமத்தின் அருகே இருக்கிறது என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவரது இந்த அறிவிப்பு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை நேபாள பிரதமரின் கருத்து யாருடைய உணர்வையும் புண்படுத்தும் வகையானது அல்ல என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உண்மைநிலை அறிவதற்காக தோரி பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள நேபாள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.