ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை!

Share this News:

புதுடெல்லி (07 ஜூன் 2020): நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்‍கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டது. தற்போது 5-ம் கட்டமாக வரும் 30-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்‍கப்படும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்‍ரியால், கல்வி நிலையங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்‍கப்படவில்லை என்றும், நடத்தப்படாமல் உள்ள தேர்வுகளை நடத்தி முடிப்பதுதான் தற்போதைய முதல் பணி என்றும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்‍கப்பட்டு வருவதாகவும், தனிமனித இடைவெளியுடன் வகுப்புகளை நடத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.


Share this News: