உத்தர்கண்ட் (18 ஜூலை,2020): உத்தர்கண்ட் மாநிலம், ரூர்கீ ஐ.ஐ.டி.யில் பயின்று வந்த நைஜீரியா மற்றும் கானா நாட்டு இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர் மீதும் அவருடைய சக மாணவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக ஐ.ஐ.டி. இயக்குநர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா நெருக்கடியால் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த மாணவர் அதனையும் மீறி வெளிச் சென்றதால் தனியார் பாதுகாப்பு ஏஜென்சியினர் உதவியுடன் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இப்ராஹீம் என்ற அந்த மாணவரை கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற்றுமாறு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது, அவரைக் குறித்து தூதரகத்தில் புகார் அளிக்குமாறு ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், அதனை புறந்தள்ளிய ஐ.ஐ.டி. நிர்வாகம் கல்லூரியுடன் தொடர்பில் இருந்த தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டு, அவ்விரு மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது. 18 பேர் கொண்ட அந்த தனியார் செக்யூரிடி குழு அவர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கியது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில், அவ்விரு மாணவர்களும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும் செய்தி தளங்களிலும் வெளியாகி பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர் இப்ராஹீம் உடைய சகமாணவரான எரிக் கூறும்போது, “இப்ராஹீம் உணவுக்காகவும், செல்ஃபோன் மற்றும் லேப்டாப் பழுதுபார்க்கவும்தான் வெளியே சென்றார். அவுட் பாஸ் பலமுறை கேட்டும் நிர்வாகம்தான் கடந்த மார்ச் மாதத்திலிருந்து அதனை எங்களுக்கு வழங்காமல் இழுத்தடித்தது” என்றார்.
இதன் அடிப்படையில், ஐ.ஐ.டி. இயக்குநர் மற்றும் பதிவாளர் மேலும் தனியார் செக்யூரிடி ஏஜென்சி கள அலுவலர் உட்பட எட்டுபேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.