கொரோனா வைரஸ் பாதிப்பால் இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் மரணம்!

Share this News:

குர்ணுல் (24 ஏப் 2020): ஆந்திர மாநிலம் குர்ணூலை சேர்ந்த புகழ் பெற்ற இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் (76) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார்.

டாட்கர் இஸ்மாயில் ஹுசைன் கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். ஆனால் சில தினங்களிலேயே அவர் உயிரிழந்தார். அவர் மரணித்த பின்பே அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகியது. அதுவே அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரெட்ஜோனில் பணிபுரிந்து வந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கக்கூடும் என்று அவரது நண்பர் ஷஃபாத் அஹமது தெரிவித்துள்ளார்.

ஏழைகளின் காவலன் என்று பெயர் பெற்ற டாக்டர் கே.எம்.இஸ்மாயில் ஹுசைன், பணத்தைப் பற்றி கவலை பட மாட்டார். 1980 மற்றும் 90களில் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்கி வந்தார். பணம் இல்லாதவர்களிம் பணம் வாங்காமலேயே இலவச சிகிச்சை அளித்து வந்தார். இதனால் அவரது வீட்டின் வெளியே அதிக அளவில் கூட்டம் வரிசையில் நிற்கும். மேலும் நடு இரவில் உடல் முடியாதவர்கள் சென்றாலும் இந்த வயதிலும் மறுக்காமல் சிகிச்சை அளிக்கக் கூடியவர் இஸ்மாயில் ஹுசைன்.

சமீப காலமாக அவர் 10 அல்லது 20 ரூபாய் கட்டணமாக பெற்று வந்தார். எனினும் அதனை கை நீட்டி வாங்க மாட்டார். அங்கிருக்கும் ஒரு பெட்டியில் போட்டுவிட்டு போக சொல்வார். அதில் எவ்வளவு இருந்தாலும் அதைப் பற்றி அவர் சிந்தித்ததோ, கேட்டதோ கிடையாது. ஏனெனில் பல ஏழைகள் பணம் இல்லாமல் சிகிச்சைக்கு வருவார்கள் என்று அவருக்கு தெரியும். அதனாலேயே அவர் பணம் வாங்குவதை தவிர்த்து வந்தார்.

அவரது இறுதிச் சடங்கில் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஊர் மொத்தமும் கலந்து கொள்ள வேண்டிய அவரது இறுதிச் சடங்கு ஊரடங்கு சட்டத்தாலும், கொரோனா பரவலாலும் ஐந்து பேர் கலந்து கொண்டது வேதனை அளிக்கிறது என்றும் அவரது நண்பர் ஷஃபாத் அஹமது தெரிவித்துள்ளார்.

டாக்டர் இஸ்மாயில் ஹுசைனுக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து அவரது மனைவி மற்றும் மகன்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply