சிஏஏவுக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் தகவல்!

Share this News:

ஐதராபாத் (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் மாநிலமாக, கேரள மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளாவைத் தொடர்ந்து, இரண்டாவதாக பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது ராஜஸ்தானிலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க இன்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகரராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவையிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார். மேலும் சமுகத்திற்கு எதிரான மத்திய அரசின் எந்த திட்டங்களையும் தெலுங்கானா அரசு ஆதரிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply