கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை!

பெங்களூரு (28 ஜன 2022): கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவதியின் மகள் சவுந்தர்யா (வயது 30) இவர் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவரின் கணவர் மீரஜும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் பெங்களூருவில் உள்ள வசந்த்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சவுந்தர்யாவின் வீட்டுக்கு வேலை செய்யும் பணிப்பெண் சென்றுள்ளார்.

கதவை திறக்கக் கூறி வெகுநேரம் தட்டி உள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பணிப்பெண், சவுந்தர்யாவின் கணவர் மீரஜுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த மீரஜ் சந்தேகம் அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சவுந்தர்யா மின் விசிறியில் தூக்கு போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவுந்தர்யாவின் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: