ரியாத் (20 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சவூதி அரேபியா இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜுன் 21 2020 முதல் அனைத்து பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் இயங்கும். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல் அவசியமாகும்.
வெளிநாட்டு விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகியவை அடுத்த அறிவிப்பு வரும் வரை இயங்காது.
மக்காவில் உம்ரா யாத்திரை மற்றும் சுற்றுலாவிற்கான தடை அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும்.
சமூக விலகல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், ஒன்று கூடல்கள் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அனைவரும் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முகமூடி அணிய வேண்டும்.
விதிமுறைகள் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும், அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.