மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். நேற்று ரியாத் நகரில் சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை அமைச்சர் அந்தோணி சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இரு தரப்பிற்கும் இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாகவும், இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் உள்பட எல்லா உதவிகளும் அளிப்பதாக சவுதி மன்னர் கூறியுள்ளார்.
மேலும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் வளைகுடா பகுதிகளில் தற்போது நிலவிவரும் நெருக்கடிக்கு ஒரு முடிவு காணப்படும் என நம்புவதாகவும், மேலும் இன்று சவுதி இளவரசரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான சுல்தானை சந்தித்து விரிவாக பேச இருப்பதாகவும் அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது அமைச்சர் அந்தோணி, மன்னர் அப்துல்லாவிற்கு, பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்த்தினை தெரிவித்தார். சவுதி மன்னர் அப்துல்லாஹ்வும், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அமைச்சரிடம் கேட்டு கொண்டார்
இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சல்மான், வெளியுறவு அமைச்சர் இளவரசர் சவூத் அல் பைசல், அமைச்சரும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டருமான இளவரசர் மித்தாப் பின் அப்துல்லாஹ், வெளி விவகாரத்துறை இணை அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் ஆகியோர்களும்,
இந்திய அரசு தரப்பில் இந்திய தூதர் ஹமீது அலி ராவ், பாதுகாப்பு துறை செயலாளர் சசிகுமார் சர்மா, ராணுவ உயரதிகாரிகள் எஸ்.கே.சிங், சதீஷ் சோனி, எம்.ஆர்.பவார் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றி வரும் சூழலில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இது முதல் தடவை என்றும் குறிப்பிடப்படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை – அமைச்சர் ஏ.கே.அந்தோணி சந்தித்தார்.