ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினவிழா வெகு விமரிசையாக 26.01.2012 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அபுதாபியில் இந்தியப் பள்ளியில் இந்திய தூதரகத்தின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்திய மூவர்ணக்கொடியினை இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் ஏற்றி வைத்தார்.
இந்திய தூதரகத்துக்கு வெளியே குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை.
மேலும் பள்ளி மாணாக்கர்களின் தேசபக்தியினை ஊக்கப்படுத்தும் விதமாக அபுதாபி இந்தியப் பள்ளியில் இந்திய தூதரகத்தின் கொடியேற்று விழா கொண்டாடப்படுவதாக இந்திய தூதர் லோகேஷ் தெரிவித்தார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின உரையிலிருந்து முக்கியப் பகுதிகளை வாசித்தார். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்வில் பள்ளியின் சேர்மன் பி.ஆர். ஷெட்டி, முதல்வர் விஜயசந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துபாய் இந்தியப் பள்ளியில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின உரையிலிருந்து முக்கியப் பகுதிகளை வாசித்தார்.
மேலும் அவர் இந்திய வளர்ச்சியில் அமீரக வாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பெரிமிதம் கொண்டார். வெளிநாடு வாழ் இந்தியராக தென் ஆப்பிரிக்காவில் இருந்த மஹாத்மா காந்தி இந்திய விடுதலைக்கு பாடுப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
மேலும் அமீரக இந்திய வர்த்தக உறவு குறித்தும் விவரித்தார். பள்ளி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய வர்த்தகப் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- முதுவை ஹிதாயத்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
அமீரகத்தில் இந்திய குடியரசு தினவிழா உற்சாக கொண்டாட்டம்!