ஆயுதம் தரித்தபடி வெளிநாட்டவரிடம் வழிப்பறி செய்த சவூதி இளைஞனுக்கு ரியாத் மாநகர பொது நீதிமன்றம் ஐந்தாண்டு சிறையும், 1500 கசையடிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ரியாத்தின் அஸீஸியா பிராந்தியத்தில் வெளிநாட்டவர் ஒருவர் செய்த முறையீட்டின் பேரில் இந்த இளைஞன் பிடிபட்டுள்ளான்.
முறையீட்டாளர் ஒரு வாடகை வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, வாகனத்தை நிறுத்திய அந்த சவூதி வாலிபன் வெளிநாட்டவரின் பணப்பை(Purse)-ஐயும் கைபேசியையும் கவர்ந்து சென்றுள்ளான். மேலும் அந்த வாகனத்தின் சாவியையும் அந்த வாலிபன் கேட்டு தொல்லைப்படுத்தியதாகவும், ஓட்டுநர் மறுத்ததாகவும், அதனால், அந்த ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டதாகவும் அந்த வெளிநாட்டவரும், அந்த வாடகை வாகன ஓட்டுநரும் காவல்துறையில் முறையிட்டிருந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே அருகிலுள்ள அஸீசியா காவல்நிலையத்தில் தாங்கள் இருவரும் (வாகன ஓட்டுநரும் சேர்ந்து) முறையிட்டோம் என்ற வெளிநாட்டவர், காவல்துறை உடனடியாக சாலைகள் தோறும் வாகனச் சோதனை நடத்த உத்தரவிட்டது என்றார்.
"குற்றவாளி குறித்த விபரங்களை மிகத் துல்லியமாக இவர்கள் தெரிவித்தபடியால், எங்கள் வேலை எளிதாயிற்று" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துர்ச்சம்பவங்கள் ஏதும் நடந்தால் உடனடியாகக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், பொது இடங்களில் அறிமுகமில்லாதவர்களுடன் எச்சரிக்கையுணர்வுடனே பழக வேண்டும் என்றும் சவூதி காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளிநாட்டவர் மீதான வழிப்பறிகள் அண்மைக்காலமாக ஆங்காங்கே அதிகம் தலைதூக்கி வரும் நிலையில், சவூதி வாழ் வெளிநாட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது என்று சவூதித் தமிழ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சவூதி: வெளிநாட்டவரிடம் திருடிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை, 1500 கசையடிகள்!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed