மஸ்கட்: ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் மஸ்கட் தமிழ்ச் சங்கம் 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2500 க்கும் அதிகமான குடும்ப தனி நபர் எண்ணிக்கை கொண்ட மிகப்பெரிய அமைப்பு இதுவாகும்.
மஸ்கட் தமிழ்ச் சங்கம் தங்களது உறுப்பினர்களுக்கான வருடாந்திர குடும்ப சங்கம நிகழ்ச்சியினை சென்ற 3-ஆம் தேதி ' மண்வாசனையோடு கிராமிய சங்கமம்’ என்று பெயர் சூட்டி, மஸ்கட்டின் அழகுமிகு கடற்கரையோரப் பகுதியான ‘அசைபா’ பகுதியில் ‘சிவில் ஏவியேஷன் கிளப்’ திறந்தவெளிக் கலையரங்கில் வைத்து நடத்தியது.
தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் காலை 8 மணிமுதலே வந்து சிறப்பித்தனர். காலைக் கடற்கரைக் காற்று வந்தவர்களை தழுவி வரவேற்க, தமிழ்ச் சங்கத்தின் கலாச்சார & இலக்கியச் செயலாளார் திரு. பஷீர் முகமது அவர்களும், பொருளாளார் திருமதி. விஜயலக்ஷ்மி அவர்களும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
தமிழ்வகுப்புக் குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்க உறுப்பினர் செயலர்.திரு.ஜெயசெல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து விளையாட்டுச்செயலர் திரு. ரகுமுத்துக்குமார், மகளிர் செயலர் திருமதி. விசாலாட்சி ஆகியோர் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். துணைத்தலைவர் திரு. அகமதுஜமீல் கேள்விபதில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
சங்க உறுப்பினர்கள் பலவிதமான அழகுப் பொருட்கள், மலர்கள், புத்தகங்கள், ஆபரணப் பொருட்கள் போன்றவற்றாலான கடைகளுடன் தமிழக பாரம்பரிய தின்பண்டங்களான முறுக்கு, வடை, பட்டாணி சுண்டல், பணியாரம் போன்றவைகளுடன் சுக்குக்காபி, தேநீர் போன்றவையும் வைத்து விழாவிற்கு அழகு சேர்த்தனர். கடற்கரைக் காற்றில் சிறுவர்கள் காற்றாடி விட்டு மகிழ்ந்தனர்.
மதியம் சைவ மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது. பிற்பகலில் கலை நிகழ்ச்சி தொடங்கியது. சங்கத்தின் தலைவர் திரு. ஜானகிராமன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். நாட்டுப்புறக் கலைமூலம் தனக்கென ரசிகர்களிடம் தனிஇடத்தைப் பிடித்துள்ள ‘கலைமாமணி’ திருமதி.டாக்டர். நவநீதகிருஷ்ணன் மற்றும் திரு.டாக்டர். நவநீதகிருஷ்ணன் தம்பதியர் தங்கள் குழுவினருடன் இணைந்து நடத்திய நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சி அனைத்து மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
கரகம், காவடி, ஒயிலாட்டம், கிளியாட்டம், மயிலாட்டம், இன்னும் பிற நாட்டுப்புற நடனங்களும், ஆடல்களும் பார்த்தவர்களைப் பரவசம் அடையச்செய்ததுடன் எழுந்து நடனமும் ஆடச்செய்தது. நாட்டுப்புறக் கலைக்காக அவர்கள் செய்த மிகப்பெரும் சேவையைப் பாராட்டி தம்பதியர்க்கு மஸ்கட் தமிழ்ச்சங்கம் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தது.
விழா இறுதியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நிறுவனங்களும் மனமுவந்து வழங்கிய பரிசுப்பொருட்கள் செயலர். திரு. சுரேஷ்குமார் மேற்பார்வையில் வழங்கப்பட்டன. மற்றும் விழாவில் தமிழ் வகுப்பில் நூறு சதவீத வருகைப்பதிவு செய்த மாணவ மாணாவியர்க்கும், திருக்குறள் திரு.தங்கமணிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற தம்போலா விளையாட்டுக்கு பல்வேறு சிறந்த பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. ஊடகத்டுறை செயலர் திரு. ராஜசேகர் நன்றியுரை வழங்கினார். மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு இது என சங்கத்தின் நிர்வாகக் குழுவினரை அனைவரும் பாராட்டினர்.
- முதுவை ஹிதாயத்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
மஸ்கட்டில் மாபெரும் தமிழர் கலாச்சார நிகழ்ச்சி!