2ஜி வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்க கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை சேர்ப்பது பற்றி சி.பி.ஐ நீதிமன்றம் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியது.
சி.பி.ஐ விசாரணையை சி.வி.சி (மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்) கண்காணிக்கும் என்றும் தீர்ப்பு கூறி உள்ளது. மேலும், 2ஜி வழக்கில் முறைகேடு செய்த 122 நிறுவனங்களின் உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது
இது அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், மத்திய அமைச்சர் சிதம்பரம் குறித்த விசாரணையை, கோர்ட் விசாரிக்க உள்ள நிலையில், சிதம்பரம் தானாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங்கை சவுத் ப்ளாக்கில் உள்ள அலுவலகத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும், பிரபல வழக்குரைஞருமான கபில் சிபல் சந்தித்துஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் 2ஜி முறைகேடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வரவேற்றுள்ளது. கோர்ட் உத்தரவுப்படி, விரைவில் மறு ஏலம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், உரிமங்களின் புதிய விலை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் டிராய் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
2 ஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு : மன்மோகன்சிங் - கபில் சிபல் தீவிர ஆலோசனை!