மத்திய பிரதேசத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பகவத் கீதை கற்பிக்க வேண்டும் என்று பா.ஜ.க-வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆனந்த் முட்டங்கல் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், அம்மனுவில், "பகவத் கீதை ஒரு மத நூல் என்பதால், பள்ளிகளில் பிற மத நூல்களும் கற்பிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் சார்பாக வழக்குரைஞர் ராஜேஷ் சந்திரா ஆஜரானார்.
நீதிபதிகள் அஜித் சிங், சஞ்சய் யாதவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இரு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரரின் வழக்குரைஞரை பகவத் கீதை படித்துவிட்டு வருமாறு கூறிய நீதிபதிகள், அதற்காக அவருக்கு இரண்டு மாத கால அவகாசம் அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையின்போது வழக்குரைஞர் ராஜேஷ் சந்திரா கீதையை வாசித்தாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"பகவத் கீதையைப் படித்தேன், ஆனால் அதை முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று வழக்குரைஞர் ராஜேஷ் சந்திரா பதிலளித்தார்.
இதை தொடர்ந்து, நீதிபதிகள் அஜித் சிங், சஞ்சய் யாதவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல; அது ஒரு வாழும் நெறி, கீதை நன்னெறியை போதிக்கிறது. சமூக நீதியைக் காப்பதன் முக்கியத்துவத்தை கீதை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பகவத் கீதை: ம.பி.உயர்நீதி மன்றம் அனுமதி!