இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (8.2.2012) முதல் மார்ச் 3ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக பைசாபாத், பஸ்தி, சிதாபூர், உட்பட 10 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. 55 தொகுதிகளில் 17 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் உட்பட பல தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக இம்மாநிலத் தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. அதன்பின்பு, கட்சி தொண்டர்களுடன் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் ஆதரவைத் திரட்டி வருகின்றனர்.தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவும் மத்திய படைகள், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 3 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
உத்தரப்பிரதேசத்தில் நாளை முதற்கட்டத் தேர்தல்