கர்நாடக சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் கிருஷ்ண பாலேமர், லட்சுமண் சவதி, சி.சி.பட்டீல், ஆகியோர் செல்போனில் ஆபாசம் படம் பார்த்த விவகாரம்,
கர்நாடகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியது. இதையொட்டி மூவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று பேரும் சட்டசபை செயலாளர் மூலமாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றார்கள்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சட்டசபை கமிட்டி ஒன்றை சபாநாயகர் போப்பையா அமைத்துள்ளார். ஆனால் சட்டசபை விசாரணை குழுவில் இடம்பெற மாட்டோம் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்து விட்டன.
இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் சந்தானந்தகவுடா, சட்டசபை சபாநாயகர் போப்பையாவை சந்தித்து பேசினார். இதற்காக விதானசவுதாவில் உள்ள சபாநாயகர் அலுவலகத்துக்கு காலை 11.30 மணிக்கு சதானந்தகவுடா வந்தார். சபாநாயகருடன் சுமார் 20 நிமிட நேரம் சந்தானந்தகவுடா பேசிக் கொண்டு இருந்தார்.
சபாநாயகர் - முதல்வர் சந்திப்பின்போது சட்டப்பேரவை அதிகாரிகள், முதல்வரின் செயலர்கள், அந்தரங்க செயலாளர்கள் உள்ளிட்டயாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இருவரும் ரகசியமாக ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
கர்நாடக எதிர்க்கட்சிகள் சட்டசபை கமிட்டியை புறக்கணித்து இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சட்டசபையில் பலான படம்: சபாநாயகர் – முதல்வர் ரகசிய ஆலோசனை!