"ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய வராததால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி அதிரடியாக கூறியுள்ளார்.
ஐந்து வட மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் பட்டியலில் குஜராத் முதல் அமைச்சர் நரேத்திர மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் பிரச்சாரம் நடந்து முடிந்த பஞ்சாப், உத்திரகாண்ட் மாநில தேர்தல் பிரச்சாரங்களிலும் விரைவில் தேர்தல் நடக்கவுள்ள உத்திரப்பிரதேச மாநில பிரச்சாரத்திலும் மோடி கலந்து கொள்ளவில்லை.
இதற்கு அத்வானி மற்றும் மோடிக்கு இடையிலான பிரதமர் பதவிக்கான போட்டியே காரணமென்றும் கட்சியில் அத்வானியின் கை ஓங்கியுள்ளதால் எரிச்சலடைந்துள்ள மோடி, வேண்டுமென்றேதான் வட மாநில தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி குறிப்பிட்டதாவது:
"ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யாததால், கட்சிக்கு எவ்வகையிலும் பாதிப்பில்லை. யாரையும் பிரச்சாரத்திற்கு வருமாறு கட்சி வற்புறுத்தாது. உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரம் காரணமாக கட்சியில் எந்த பிளவும் இல்லை. மோடி பிரச்சாரத்துக்கு வராதது ஒரு பெரிய விஷயமே அல்ல.
ஒவ்வொருவரும் தங்கள் சவுகரியத்திற்கு ஏற்ப பிரச்சாரத்திற்குச் செல்கிறார்கள். நாங்கள் பிரச்சாரக்காரர்கள் நிறைய பேரை வைத்துள்ளோம். பிரச்சாரத்தின் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம்."
மேற்கண்டவாறு அத்வானி கூறினார்.
தமிழகத்தில் சோவின் துக்ளக் பத்திரிக்கை ஆண்டுவிழாவில் நேரடியாக வந்து கலந்து சென்ற மோடி, தன் கட்சியின் பிரச்சாரத்துக்குச் செல்லாதது கட்சியில் அவர்மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோவுக்குக் கொடுக்கும் மரியாதைகூட மோடி, கட்சிக்குக் கொடுக்கவில்லை என்று பாஜக தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
மோடி பிரச்சாரம் செய்யாததால் பாஜகவுக்குப் பாதிப்பில்லை: அத்வானி!