கொழும்புவில் உள்ள சிறையொன்றில் இன்று நடைபெற்ற கலவரத்தில் அதிகாரிகள் உட்பட பலர் பலத்த காயமடைந்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள வெலிகட சிறைச்சாலையில் இந்தக் கலவரம் நடைபெற்றுள்ளது. இங்கு சுமார் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் போதைபொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களான இக்கைதிகளிடையே சிறையிலும் போதை பொருள் அதிக அளவில் புழக்கத்திலிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க பல்வேறு நிபந்தனைகளுடன் புதிய நடைமுறை விதிகள் அதிகாரிகளால் கொண்டுவரப்பட்டுள்ளது.கைதிகளுக்கு உறவினர்கள் உணவு கொண்டு வருவதும் தடை செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கைகளை கண்டித்து இன்று (24.01.2012) காலையில் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க வந்த காவல்துறையினர் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பதிலுக்கு கைதிகள் கூரிய கற்களைக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர். ”இந்த மோதலில் நான்கு அதிகாரிகள் காயமடைந்து கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 24 கைதிகளும் காயம் அடைந்துள்ளததாகவும்” காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். . கைதிகள் சிலர் ஆவணக் காப்பகத்திற்கும் தீ வைத்தனர்.கலவரத்தை அடக்க சிறப்பு காவல்படை வரவழைக்கப்பட்டது. கண்ணீர் புகை குண்டுவீச்சு மூலம் கலவரத்தை அவர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தக் கலவரத்தினால் இதில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் 180 பேர் மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது. ஐந்து மணி நேரக் கலவரத்திற்கு பிறகு நிலைமை சுமுகமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று காலி சிறைச்சாலையில் காவலர் ஒருவரைத் தாக்கி விட்டு மூன்று கைதிகள் தப்ப முயன்ற சம்பவம் ஏற்படுத்திற பரபரப்பு அடங்குவதற்குள் இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கொழும்பு சிறையில் கலவரம்!