சட்டசபையில் இன்று பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க., உறுப்பினர் சந்திரகுமார் எழுப்பிய கேள்வி தொடர்பாக அ.தி.மு.க- தே.மு.தி.க.வுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முதல்வர்ஜெயலலிதாவும் - எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் விலைவாசி குறித்து நேருக்கு நேர் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
விவாதம் நடந்து கொண்டிருந்த போது சட்டசபையில் இரு தரப்பிலும் கைநீட்டி பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களை கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் சபை காவலர்கள் அவையிலிருந்து வெளியேற்றினர்.
இதனிடையே சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜெயக்குமார், தேமுதிக உறுப்பினர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்ட விதம் குறித்து உரிமைக்குழு விசாரிக்க பரிந்துரை செய்வதாகக் கூறினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா எழுந்து, சபையில் தேமுதிக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அவர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் குறைந்த பட்ச தண்டனை பரிந்துரையாக உரிமைக் குழுவுக்கு அனுப்பச் சொல்கிறார்.
தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
இந்தக் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்தலில் நாங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றிருப்போம். அதிமுகவை முழு வெற்றி அடையச் செய்வது என்பது மக்கள் ஏற்கெனவே எடுத்த முடிவு.
என் கட்சிக் காரர்கள் வற்புறுத்தியதால்தான் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அரைகுறை மனதோடு சம்மதம் தெரிவித்தேன். இவர்களுடன் கூட்டணி வைத்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப் படுகிறேன். வேதனைப்படுகிறேன் என்றார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்,வேதனைப்படுகிறேன்: முதல்வர் ஆவேசம்..!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed