வரவிருக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தி.மு.க வின் ஆலோசனைக்கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தை கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.
புறக்கணிப்பு ஆயுதத்தை வழக்கமாக அழகிரியே கையாண்டு வந்துள்ள நிலையில் முதன் முறையாக மு.க. ஸ்டாலினே ஒரு முக்கியக் கூட்டத்தைப்புறக்கணித்துள்ளது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் பதவி தொடர்பாக பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்பால் அவர் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
கட்சியில் நிலைமை எப்படி இருந்தாலும் எதையும் புறக்கணிக்காமல் கலந்து கொள்வார் ஸ்டாலின். ஆனால் அவரே நேற்றையக் கூட்டத்தைப் புறக்கணித்தது திமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. கூட்டத்தில் பொது செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தென்மண்டல அமைப்பு செயலாளர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி 3-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது. மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டதும் அறிந்ததே. பொதுக்குழுவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இதனை சுட்டிக்காட்டி, இதுதான் இப்போதைய தி.மு.க.வின் லட்சணம் என்று குமுறிக் கொட்டினார். தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்... மீண்டும் தேர்தல் நடத்தலாம் என்றும் அவர் ஆவேசமாக பேசியது ஸ்டாலின் தரப்பை அதிர வைத்துள்ளது.
நேற்று சட்டப்பேரவைக்கும் ஸ்டாலின் செல்லவில்லை. துரைமுருகன் தலைமையில்தான் தி.மு.க.வினர் சட்டமன்ற வெளிநடப்பு செய்திருந்தனர்.
மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தார். எனினும் தி.மு.க.வின் அனைத்து உயர்மட்ட கூட்டத்திலும் தவறாமல் பங்கேற்கும் அவர் நேற்றைய கூட்டத்தைப் புறக்கணித்தது, அரசியல் வட்டாரத்தில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
திமுக ஆலோசனைக்கூட்டத்தைப் புறக்கணித்தார் ஸ்டாலின்!