தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதா - விஜயகாந்த் ஆகியோர் இடையே ஏற்பட்ட விவாதத்திற்கு பின்னர், தே.மு.தி.க.வினர் வெளியேற்றப்பட்ட பின்னர் பேசிய முதல்வர் ஜெயலலிதா,
"தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால் அதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூட புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என்று நினைத்து நான் வருத்தப்படுகிறேன். உள்ளபடியே அதற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்." என்று கூறினார்.
சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்த பிரச்னையை உரிமை மீறல் குழு விசாரிக்கும் என்று பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடைபெற்ற உரிமை மீறல் குழுக்கூட்டத்தில், பேரவையில் தேமுதிகவினர் நடந்து கொண்ட விதம் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த முடிவின்படி, 'இந்தக் கூட்டத்தொடர் மற்றும் அடுத்து வரும் கூட்டத்தொடர் சேர்த்து மொத்தம் 10 நாட்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் கூடிய நிபந்தனையுடன் மற்ற தேமுதிக உறுப்பினர்கள் சபைக்கு அனுமதிக்கப்படுவர்,' சபாநாயகர் கூறினார்.
இந்நிலையில் தே.மு.தி.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டப்பேரவையில் தமிழக அரசு முறையாக இயங்கவில்லை. சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகிறது.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். இடைத்தேர்தலை சந்திக்க நான் பயப்பட மாட்டேன். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு நான்தான் வருத்தப்படுகிறேன். தே.மு.தி.க., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார். ஆனால், முதல்வர், தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்வாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ராஜினாமா செய்ய நாங்கள் தயார், நீங்கள் தயாரா?: ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் சவால்!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed