தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க.தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நில அபகரிப்பு விவகாரத்திலும், அதிமுகவும் திமுகவும் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், "கடந்த சட்டமன்ற தேர்தலில் பதவி ஆசைக்காக நான் அதிமுகவுடன் கூட்டணி சேரவில்லை. மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம். கூட்டணி சேராவிட்டால் பணம் வாங்கிக்கொண்டு கூட்டணி சேரவில்லை என்பார்கள். எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களை போன்றவர்கள்.
சட்டப்பேரவையில் கையை நீட்டக் கூடாது எனச் சொல்கிறார்கள். அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? ஏதாவது காரணம் சொல்லி என் பேச்சுக்கு தடை விதிக்க முயற்சி நடக்கிறது. சட்டமன்றத்தில் தடை விதித்தால் என்ன, மக்கள் மன்றத்தில் இந்த ஆட்சியின் தவறுகளை எடுத்துச் சொல்லுவேன்.
சட்டப்பேரவையில் எனக்கு தடை விதித்தது தவறான முன்னுதாரணம். சட்டப்பேரவை தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்து போராடி வரும் மக்களை ஜெயலலிதா சந்திக்காதது ஏன்?.
நிலஅபகரிப்பு புகார் தொடர்பாக திமுகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட அதே வேகத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி வருகின்றனர். இதில், ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியவில்லையா அல்லது காவல்துறையினருக்கு சட்டம் தெரியவில்லையா என புரியவில்லை. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் ரகசிய கூட்டணி உள்ளதாக சந்தேகப்படுகிறேன்.
தே.மு.தி.க-வினர் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் போனவர்கள். நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், வரும் 2016-ல் தே.மு.தி.க ஆட்சி அமைக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
நில அபகரிப்பு: அ.தி.மு.க, தி.மு.க. ரகசிய கூட்டணி- விஜயகாந்த் குற்றச்சாட்டு!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed