அமெரிக்க பாராளுமன்றத்தை தாக்கவிருந்ததாக தெரிவித்து ஒரு தற்கொலை தாக்குதல்தாரியை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மொராக்கோவைச் சார்ந்த 29 வயதான அமீன் எல் கலீபி என்பவரே இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (17.02.2012) அமெரிக்கப் பாராளுமன்றத்தின் அருகில் கைது செய்யப்படும்போது இவரிடமிருந்து தானியங்கி துப்பாக்கியும், தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான உடையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அலெக்ஷாண்டிரியா மாவட்ட நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்காக கொண் டு செல்லப்பட்டுள்ளார். அவருடைய குற்றம் நிரூபணம் செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படலாம். ”இவ்வாறான சம்பவங்களை தீர விசாரிக்க வேண்டும்” என போர்தம் சட்டப்பள்ளியினுடைய தேசிய பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் கரன் கிரின்பெர்க் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் பல பொய்யான குற்றச்சாட்டுகளைக் கொண்டதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலீபி வடக்கு விர்ஜினியாவில் சட்ட விரோதமாக தங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர் அல்காய்தாவினைச் சார்ந்தவரா என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15 அன்று ஒரு குவாரியில் இவர் அலைபேசியின் மூலமாக சிறிய அளவிலான குண்டை வெடிக்கச் செய்ததாக தெரிகிறது. பாராளுமன்றத்தை தகர்க்க நினைத்த இவருடைய சதித்திட்டத்தை இவருடன் ஒன்றாக இருந்த அமெரிக்க உளவுத்துறையின் உளவாளி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாதக்குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நபர்களுக்கு வாதிட்டு வரும் அஷ்ரப் நுபானி என்ற வழக்குரைஞர்,”இவ்வாறான திட்டங்கள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை உளவுத்துறையின் மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார். சமீப காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். ”ஆக்ரோசமாக பேசுபவர்களிடம் தங்களது உளவாளிகளின் மூலம் தொடர்பு கொண்டு இவ்வாறான சம்பவங்களைத் திட்டமிட்டு பின்னர் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்வதாக” அவர் தெரிவித்துள்ளார்.
நீதித் துறையின் பேச்சாளர் டீன் பாய்ட் கூறுகையில் ”இந்த சதித்திட்டத்தின் சூத்திரதாரி கலீபி என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன,
உளவுத்துறையின் உளவாளிகள் மூலம் ஒரு நபரை பிடிப்பதற்கு அவர் குற்றம் புரிய தயாராக இருப்பதாக தகவல்கள் வந்த பின்னர்தான் முயற்சி செய்வதாகவும்” அவர் தெரிவித்தார்.
வரும் புதன்கிழமை கலீபி மீதான முதல் கட்ட விசாரணை ஆரம்பமாக உள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
அமெரிக்க பாராளுமன்றத்தை தகர்க்க திட்டம் - தற்கொலை குண்டுதாரி கைது...
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed