"கழகம் என் குடும்பம்" எனச் சொல்லி, கழகத் தொண்டர்களை உடன்பிறப்பே என விளித்துக் கட்சியைத் தம் பிடிக்குள் வைத்திருந்த கருணாநிதி, ஆட்சி அதிகாரம் பதவி பணம் என வந்தபோது "என் குடும்பமே கழகம்" என மாற்றிக் கொண்டார்.
தி மு க தலைமைப் பொறுப்புகளைப் பற்றி வினா எழும்போதெல்லாம் "தி மு க ஒன்றும் சங்கர மடமல்ல; தி மு க சட்டதிட்டங்களுடன் செயல் படும் ஜனநாயக இயக்கம்" என்றே விடையளிப்பது கருணாநிதியின் வழக்கம்.
தி மு க சங்கர மடமில்லைதான். சங்கராச்சாரியார்களுக்குப் பெரிய வீடு சின்ன வீடு பிரச்சனை இல்லை; மக்களும் இல்லை. வாரிசு யாரும் பதவி கேட்டு நச்சரிப்பதும் இல்லை. அவ்வகையில் கருணாநிதி கூறியது சரிதான். தி மு க சங்கரமடம் இல்லைதான். அதனால்தான் அவர் பெற்ற பிள்ளைகள் பதவிப்போட்டியில் குதித்துள்ளனர். ஜனநாயக இயக்கம் என்ற லேபிள் இருப்பதால் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை(பிப்ரவரி 3) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது.
கருணாநிதி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டம் இன்று(பிப்ரவரி 2) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் "14 ஆவது உள்கட்சித் தேர்தல் மற்றும் கட்சி அமைப்பு முறை தொடர்பான சட்டத் திருத்தங்கள் குறித்து விவாதிக்கப் படும்" என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
"2014 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல், உள்கட்சித் தேர்தல், 2G விவகாரம் தொடர்பாக பொதுக் குழுவில் விவாதிக்கப் பட உள்ளது" எனக் கூறப் பட்டாலும் கருணாநிதியின் குடும்பத்தில் சிலருக்குப் பட்டாபிசேகம் நடைபெறக் கூடும் என்றும் குறிப்பாகக் கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப் படக் கூடும் என்றும் உயர்நிலைச் செயல் திட்டக் குழு கூட்டத்தில் துணைத் தலைவர் பதவியை உருவாக்கத் தேவையான ஒப்புதல் வழங்கப் படும் என்றும் தெரிகிறது.
கடந்த வருடம் ஜூலையில் கூடிய செயற்குழு மற்றும் பொதுக் குழுவிலேயே ஸ்டாலினுக்குச் செயல் தலைவர் பதவி வழங்கப் படக் கூடும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அழகிரி மற்றும் ராசாத்தி அம்மாளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஸ்டாலினுக்குப் பதவி உயர்வு தள்ளிப் போனது என்றும் கூறப் பட்டது.
இளைஞர் அணியின் பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம் செய்யப் பட்டுள்ள நிலையில் இளைஞர் அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் அப்பொறுப்பில் இருந்து விலகுவார் என்றும் அப்பதவிக்கு ஸ்டாலின் மகன் உதயநிதி அல்லது உதயநிதியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கொண்டு வரப் படக் கூடும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஸ்டாலினுக்கும் பொருளாளர் பதவியில் இருந்து துணைத் தலைவர் பதவி அல்லது செயல் தலைவர் புரமோசன் வழங்கப் படக் கூடும் என்றும் தெரிகிறது. திகார் சிறை சென்று வந்த கனிமொழிக்கு ராசாத்தி அம்மாளின் தீவிர முயற்சியால் கட்சியில் உரிய பதவி வழங்கப் படக் கூடும் என்றும் தலைவர் கருணாநிதி இதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறப் படுகிறது. கனிமொழிக்காகத் தாம் வகித்து வரும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை சற்குணப் பாண்டியன் ராஜினாமா செய்ய இருப்பதாகவும், சற்குணப் பாண்டியன் விலகும் நிலையில் துணைப் பொதுச் செயலாளர் பதவி அல்லது ஸ்டாலின் விலகும் பட்சத்தில் பொருளாளர் பதவி இவற்றில் ஏதாவது ஒரு பதவி கனிமொழிக்கு வழங்கப் படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2G வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப் பட்ட கனிமொழியின் சென்னை வருகையின்போது கொடுக்கப் பட்ட தடாலடி வரவேற்புகள் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் எரிச்சலை ஏற்படுத்தியதாகச் செய்திகள் வந்தன. சாதாரணமாக சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களிலேயே நடத்தப் படும் பொதுக் குழு கூட்டங்கள் இம்முறை வெள்ளியன்று நடைபெறுவதிலும் ஸ்டாலின் கைங்கர்யம் இருப்பதாகத் தெரிகிறது. 2G வழக்கு விசாரணையில் ஆஜராகி வரும் கனிமொழி பொதுக் குழுவில் பங்கேற்கக் கூடாது என்றே பொதுக் குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது. பொதுவாக அண்ணா நினைவு நாளில் இதுவரை தி மு க பொதுக்குழு நடத்தப்பட்டதில்லை என்பதும் கூடுதல் கவனத்துக்குரியது.
"ஸ்டாலின் பதவி உயர்வு, கனிமொழிக்குக் கட்சிப் பதவி" என்று ஏறக் குறைய முடிவாகி விட்ட நிலையில் அழகிரி என்ன மாதிரி முடிவெடுக்கப் போகிறார் என்று தெரிய வில்லை. ஜூலையில் நடைபெற்ற பொதுக் குழுவிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று கருதப் பட்ட நிலையில் பொதுக் குழுவில் கலந்து கொண்ட அழகிரி கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். மேலும் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைவிட மாநில அளவில் வேறு பதவியை அழகிரியும் கேட்டு வருவதாகத் தெரிகிறது. கருணாநிதிக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அழகிரி கூறி இருக்கும் நிலையில் ஸ்டாலினுக்கு வழங்கப் பட உள்ள பதவி உயர்வை ஈடுகட்ட அழகிரிக்கும் முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கருணாநிதி அழகிரியை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று தெரிய வில்லை.
ஸ்டாலின், அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோருக்குக் கட்சியில் முக்கியப் பதவிகளைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கருணாநிதி கட்சியின் உண்மை விசுவாசிகளான உடன்பிறப்புகளுக்கு இதயத்தில் இடம் கொடுத்து பட்டை நாமம் போட்டுள்ளார். நல்லவேளையாக தமிழரசு, மு.க. முத்து, செல்வி என பிற மக்களும் கட்சிப் பதவி கேட்டுத் தமக்கு நெருக்கடி கொடுக்க வில்லை என்று கருணாநிதி சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். அவர்களும் போட்டிக்கு வந்தால் பேராசிரியர் அன்பழகன் போன்ற மூத்தவர்களும் கூட தம் பதவிகளைத் துறக்க வேண்டிய மோசமான நிலை எழலாம்.
வாழ்க அண்ணா நாமம்! வளர்க கருணாநிதி குடும்பம்!
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed