இரு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக தலைவர் கருணாநிதி, 2G வழக்கில் கைதாகி அண்மையில் பிணையில் வெளிவந்திருக்கும் தன் மகள் கனிமொழியுடன் சென்று சந்தித்தது திமுகவிலும் குடும்பத்திற்குள்ளும் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து திமுக சார்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கோரிக்கை மனு அளிக்க முடிவாகி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பெயரும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப் பட்டது. திமுக சார்பில் கருணாநிதியுடன் பிரதமரைச் சந்திக்கும் திமுகவினர் பட்டியலில் கனிமொழியின் பெயர் இல்லை.
கிடைத்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சாதுர்யமாகச் செயல்பட்ட ராசாத்தி அம்மாள், கருணாநிதியிடம் கனிமொழியையும் அழைத்துச் செல்ல வலியுறுத்தவே கடைசி நேரத்தில் கனிமொழியின் வருகையும் ஆளுநர் மாளிகைக்குத் தெரிவிக்கப் பட்டது. பிரதமரைச் சந்திக்க தம் மகள் கனிமொழியுடன் கருணாநிதி சென்றது கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் பெரிய புகைச்சலை உண்டாக்கியுள்ளது.
கட்சியின் நிர்வாகிகள் சிலர், 2G வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் ராசா பிணையில் வெளிவந்து பிரதமரைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டால் கருணாநிதி உடன் அழைத்துச் சென்று இருப்பாரா? என்று கேள்வி எழுப்புவதாகவும் கூறப் படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|