
பாரத ரத்னா விருதுக்கு கிரிக்கெட் கிரேட் சச்சின் டெண்டுல்கர் பெயரை பரிந்துரைக்காமல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விலக்கிவிட்டுள்ளது.
சிலமாதங்களுக்கு முன்பு வரை, கலை, இலக்கியம், அரசியல், சமூகம், விஞ்ஞானம், ஆகியவற்றில் சிறந்துவிளங்கும் அறிஞர்களுக்கே வழங்கிடத்தக்கதாக பாரதரத்னா விருது தகுநிலை பெற்றிருந்தது. பாரதரத்னாவின் தகுதிக்களங்களில் விளையாட்டுத்துறையையும் சேர்க்க வேண்டும் என்று மராட்டிய அரசியல்வாதிகள் பலரும், சச்சின் டெண்டுல்கரின் அபிமானிகளும் கோரிக்கை விடுத்ததையடுத்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கென் பிரதமர் அலுவலகத்திற்கு பரிந்துரைத்ததன் பேரில் விளையாட்டுத்துறை உச்சங்களுக்கும் பாரதரத்னா வழங்கலாம் என்று மத்திய அரசு விதிமுறைகளைத் தளர்த்தியது. இதையடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா வழங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆயினும், இவ்வாண்டு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பாரதரத்னாவின் தகுதிக்குரியவர்களாகத் தனது பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்குப் பரிந்துரைத்திருப்பதில் சச்சின் டெண்டுல்கர் பெயர் சேர்க்கப்படவில்லை.
ஆனால் ஹாக்கி ஹீரோ மேஜர் தயான்சந்த் பெயரும், எவரெஸ்ட் தொட்ட முதல்வர் டென்சிங் நார்கே பெயரும் பாரதரத்னாவுக்குரிய பரிந்துரைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகத் தெரிகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed