அஹமதாபாத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 16 ஓட்டங்களில் உலக வாகையர் இந்தியாவை வெற்றி கண்டது.
முன்னதாக, நிர்ணயிக்கப்பட்ட 50 சுற்று பந்துவீச்சுகளில் 260 ஓட்டங்கள் எடுத்திருந்த மேற்கிந்திய அணி, பின்னர் இந்தியாவை 244 ஓட்டங்களில் வீழ்த்தியது. அவ்வணியின் ரவி ராம்பால் 57 ஓட்டங்கள் கொடுத்து 4 இந்திய வீரர்களை வீழ்த்தினார்.
இந்தியத் தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் ஷேவாக், மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஏமாற்றினாலும், ரோஹிட் ஷர்மா சிறப்பாக ஆடி 95 ஓட்டங்கள் பெற்றார். 100 பந்துகளில் எடுக்கப்பட்ட இந்த ஓட்டங்களில் 10 நான்கடிகளும், ஓர் ஆறடியும் அடங்கும். புதுமாப்பிள்ளையான தமிழகத்தின் அஷ்வின் 64 பந்துகளில் 31 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.
இந்திய அணி தரப்பில் வருணுக்குப் பகரமாக அபிமன்யு மிதுன் பந்துவீச, சேர்க்கப்பட்டிருந்தார். மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் நான்காவது ஆட்டம் டிசம்பர் 8ம் தேதி இந்தூரிலும், ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம் டிசம்பர் 11ம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளது. இவ்விரு ஆட்டங்களிலும், பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ்வுக்குப் பகரமாக, உள்ளூர் ஆட்டங்களில் நன்கு விளையாடி வரும் இர்ஃபான் பதான் சேர்க்கப்பட்டுள்ளார்.
| < முந்தைய பக்கம்... | அடுத்த பக்கம்... > |
|---|
